கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே வறட்சியால் உணவு தேடி ஊருக்குள் வந்த மான் கூட்டம், சாலையோர குப்பை மேட்டில் பிளாஸ்டிக் கழிவுகளை தின்று கொண்டிருந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தில் வறட்சியின் தாக்கத்தால் உணவு மற்றும் தண்ணீரை தேடி ஊருக்குள் வரும் வனவிலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், சாலையோர குப்பை மேட்டில் பிளாஸ்டிக் கழிவுகளை மான் கூட்டம் தின்று கொண்டிருந்த காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரியநாயக்கன்பாளையம் அடுத்த நாயக்கன்பாளையத்தில் இருந்து கோவனூர் செல்லும் பிரதான சாலையோரத்தில் கொட்டப்பட்டிருந்த குப்பை மேட்டில், காட்டு மான்கள் கூட்டமாக உணவு தேடி வந்தன. அப்போது அங்கு கிடந்த பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் வீணான உணவுப் பொருட்களை அவை தின்று கொண்டிருந்த காட்சியை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டி ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்தார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவில் பெய்யாததால் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் காடுகளில் உணவு மற்றும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், மான், காட்டு யானை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளை நோக்கி வரத் தொடங்கியுள்ளன.
பிளாஸ்டிக் கழிவுகளை உண்பதால் வனவிலங்குகளின் உடல்நலத்திற்கு கடுமையான பாதிப்புகள் ஏற்படுவதோடு, உயிரிழப்பு அபாயமும் இருப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.
எனவே, வனத்துறை அதிகாரிகள் காடுகளுக்குள் போதிய குடிநீர் வசதிகளை ஏற்படுத்துவதுடன், வன எல்லையோரங்களில் குப்பை கொட்டப்படுவதை தடுக்கவும், ஏற்கனவே தேங்கியுள்ள குப்பைகளை உடனடியாக அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





