கோவை: கே.ஜி. சாவடி மற்றும் மதுக்கரை பகுதியில் மலேசிய நாட்டின் சுற்றுலாப் பயணிகளுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தந்தை, மகன் காயம் அடைந்த சம்பவம் தொடர்பாகவும், பின் தொடர்ந்து வந்து துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய நபர் குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று மாலை சுமார் 5.30 மணி அளவில், கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து சென்னை நோக்கி ‘ஃபோர்ஸ் அர்பானியா’ (Force Urbania) வாடகை வாகனத்தில் மலேசியாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் குழு ஒன்று பயணித்துக் கொண்டு இருந்தது.
கே.ஜி. சாவடி காவல் எல்லைக்கு உட்பட்ட கொச்சி – சேலம் புறவழிச்சாலையில் உள்ள நவக்கரை பெட்ரோல் பங்க் அருகே வந்த போது, அந்த வாகனத்தின் ஓட்டுநருக்கும், அங்கு நின்று கொண்டு இருந்த லோகநாதன் (52) மற்றும் அவரது மகன் உகேந்திரன் (21) ஆகிய இரு நபர்களுக்கும் இடையே திடீரெனக் காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.
இந்த மோதலில் லோகநாதன் மற்றும் உகேந்திரன் ஆகிய இருவரும் காயம் அடைந்தனர்.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, மலேசியச் சுற்றுலாப் பயணிகள் பயணித்த அந்த வாகனம் அங்கு இருந்து மதுக்கரை நோக்கித் தப்பிச் சென்றுள்ளது. அப்போது, மதுக்கரை சந்தை அருகே அந்த வாகனத்தை இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர் ஒருவர், துப்பாக்கி போன்ற ஒரு பொருளைக் காட்டி வாகனத்தை மிரட்டி நிறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதைப் பார்த்த பொதுமக்கள் உடனடியாகச் சம்பவ இடத்தில் கூட்டமாகத் திரளவே, போலீஸாருக்குத் தகவல் பரவியதை உணர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த அந்த நபர்கள் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பியோடினர்.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த பேரூர் துணைக் காவல் கண்காணிப்பாளர் (DSP) மற்றும் மதுக்கரை காவல் ஆய்வாளர் ஆகியோர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் இந்த அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், அப்பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள சி.சி.டி.வி (CCTV) கேமரா காட்சிகளைக் காவல்துறையினர் முழுமையாக ஆய்வு செய்து வருகின்றனர்.
தப்பியோடிய நபர்களை அடையாளம் காணவும், சம்பவத்திற்கான உண்மையான பின்னணி என்ன என்பதைக் கண்டறியவும் தீவிர விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.





