கோவை: கோவையில் மதுப் பழக்கத்தால் ஏற்பட்ட குடும்பத் தகராறைத் தொடர்ந்து தம்பதி இருவரும் தனித்தனியாக விஷம் அருந்திய சம்பவத்தில், சிகிச்சை பெற்று வந்த கணவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை ராக்கிபாளையம் மாருதி நகரைச் சேர்ந்தவர் ராஜசேகர் (33). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர், மது அருந்தும் பழக்கத்தால் கடந்த ஒரு வாரமாக வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் ராஜசேகர் மற்றும் அவரது மனைவி புஷ்பா (30) இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த தம்பதியருக்கு ஒரு வயது குழந்தை உள்ளது.
இந்த நிலையில், கடந்த 11-ஆம் தேதி ஏற்பட்ட தகராறால் மனவேதனையடைந்த புஷ்பா, கரப்பான்பூச்சி கொல்லி மருந்து கலந்த சாக்லேட்டை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.
அவரை குடும்பத்தினர் உடனடியாக மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
மனைவி தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் விரக்தியடைந்த ராஜசேகர், மறுநாள் அதிகாலை விஷம் அருந்தி மயங்கி விழுந்தார். அவரையும் குடும்பத்தினர் மீட்டு முதலில் தனியார் மருத்துவமனைக்கும், பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், ராஜசேகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





