கோவை: மத நல்லிணக்கம் குறித்து ஜமாத் நிர்வாகிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் போலீஸ் கமிஷனர் தலைமையில் நடைபெற்றது.
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன் தலைமையில், மாநகரில் உள்ள பல்வேறு ஜமாத் நிர்வாகிகள், இமாம்கள் மற்றும் முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் சட்டம்-ஒழுங்கு, மத நல்லிணக்கம் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் கோவை மாநகர வடக்கு, தெற்கு துணை கமிஷனர்கள், சட்டம்-ஒழுங்கு, நுண்ணறிவு பிரிவு மற்றும் சிறப்பு நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Also Read: கோவை போலீசார் பயன்படுத்திய வாகனங்கள் ஏலம்; எப்போது?
தொடர்ந்து கூட்டத்தில், மத நல்லிணக்கம், சமூக ஒற்றுமை மற்றும் அமைதியை நிலைநிறுத்துவதில் ஐமாத்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என கமிஷனர் தெரிவித்தார்.
சட்டம்-ஒழுங்கை பேணுவதில் போலீசாருக்கு தொடர்ந்து முழு ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக் கொண்டார். மேலும், போதைப்பொருள் ஒழிப்பு, சாலை பாதுகாப்பு, இணைய வழி மோசடிகள் குறித்த விழிப்புணர்வு மற்றும் பெண்கள், குழந்தைகள், முதியோரின் பாதுகாப்பு ஆகியவற்றில் போலீசாருடன் இணைந்து செயல்படுமாறு அறிவுறுத்தினார்.
சந்தேகத்திற்கிடமான நபர்கள், சட்ட விரோத செயல்பாடுகள் அல்லது சமூக அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு தகவலும் கிடைத்தால் உடனடியாக போலீசாருக்கு தெரிவிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து, ஜமாத் நிர்வாகிகள் தங்களது பகுதிகளில் நிலவும் போக்குவரத்து நெரிசல், பொதுமக்களின் பாதுகாப்பு, இதர அடிப்படை பிரச்னைகள் மற்றும் புதிய வழிபாட்டுத் தலங்கள் கமிஷனரிடம் கோரிக்கை விடுத்தனர்.
அதற்கு பதிலளித்த கமிஷனர் சம்பந்தப்பட்ட துறைகளுடன் இணைந்து அவற்றை பரிசீலித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படும் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் கூடும் பகுதிகளில் தேவைக்கேற்ப கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் உறுதியளித்தார்.





