கோவை: கோவை துடியலூர் பகுதியில் குப்பைகளை நான்கு வகைகளாக பிரித்துக் கொடுப்பது பற்றி மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
குப்பைகளை ஒன்றாக சேர்த்து குப்பை சேகரிப்பவர்களிடம் கொடுப்பதை தவிர்க்கும் பொருட்டு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெடுப்புகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி தற்பொழுது குப்பைகளை நான்கு வகைகளாக தரம் பிரித்து கொடுக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி மக்கும் குப்பைகளை பச்சை நிற குப்பை தொட்டியிலும் காகிதம் பிளாஸ்டிக் போன்ற உலர் குப்பைகளை நீலம் நிறம் குப்பை தொட்டிகளிலும் மருத்துவ சுகாதார குப்பைகளை சிவப்பு நிற குப்பை தொட்டியிலும், மின்சாதன குப்பைகளை கருப்பு நிற குப்பை தொட்டியிலும் பிரித்து கொடுக்க வேண்டும் என்று பொதுமக்களிடையே எடுத்துரைக்கப்பட்டு வருகிறது.
அதன்படி கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட துடியலூர் பகுதியில் இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் நான்கு வண்ண குப்பை தொட்டிகளுடன் பேரணி மேற்கொண்டு துடியலூர் பேருந்து நிலையம் அருகில் பொதுமக்களுக்கு இது குறித்து எடுத்துரைத்தனர்.
கட்டாயமாக பொதுமக்கள் அனைவரும் குப்பைகளை நான்கு வகைகளாக தரம் பிரித்துக் கொடுக்க வேண்டும் என்று இந்த விழிப்புணர்வு பேரணியில் எடுத்துரைக்கப்பட்டது.
இவ்வாறு பொதுமக்கள் நாமே குப்பைகளை தரம் பிரித்து கொடுப்பதால் குப்பை சேகரிப்பவர்களுக்கு எளிதாக இருக்கும் அதேசமயம் குப்பைகளை வீட்டிலேயே தரம் பிரித்து வைத்து கொள்வதன் மூலம் வீட்டில் நாம் இல்லாவிட்டாலும் குப்பை சேகரிப்பவர்கள் சரியாக பார்த்து அவற்றை சேகரித்துக் கொள்வார்கள்.





