கோவை: டெல்லி மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக திமுக அலுவலகத்திற்குள் மாணவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக கோவையில் திமுக அலுவலகத்திற்குள் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் மத்திய கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதற்கு ஆதரவாக பல்வேறு கட்சியினரும் பொதுமக்களும் திரண்டு வரும் நிலையில் அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு இடங்களிலும் பல்வேறு கட்சியினர் அமைப்புகள் மாணவர் அமைப்பினர் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக கோவையில் வடகோவை பகுதியில் உள்ள திமுக அலுவலகத்திற்குள் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் டெல்லியில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு பின்னர் திமுகவில் இணைந்த வேட்பாளர் ஸ்ரீநிதி முன்னிலையில் இந்த காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் கண்டன பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர். மேலும் இந்த காத்திருப்பு போராட்டத்தில் மத்திய அரசு மட்டுமல்லாமல் தமிழக அரசையும் கண்டித்தனர். தமிழக முதல்வர் விஜய் நீட் தேர்வுக்கு எதிராக போராடும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிக்காமல் மௌனமாக இருப்பதாகவும் மாணவர்களின் போராட்டம் ஒருபுறம் சென்று கொண்டிருக்கும் பொழுது ஜனநாயகன் திரைப்படத்தை வெளியிட்டு தமிழக வெற்றி கழகத்தினர் கொண்டாட்டங்களில் ஈடுபடுவதாகவும் இந்த காத்திருப்பு குற்றம் சாட்டப்பட்டது.
பொது இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதி கேட்டால் காவல்துறையினர் அனுமதி வழங்கவில்லை என்றும் எனவே திமுக அலுவலகத்திற்குள் காத்திருப்பு போராட்டத்தை நடத்துவதாக தெரிவித்துள்ளனர்.





