கோவை: கல்லூரிகளுக்கு அருகில் போதை பொருள் விற்பனை போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுபவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் போதைப்பொருள் தடுப்பு குறித்து தனியார் கல்லூரிகள் சார்பில் மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் துவக்கி வைத்து கலந்து கொண்டார்.
மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கல்லூரி மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ரேஸ்கோர்ஸ் பகுதியில் மனித சங்கிலியாக நின்று பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்த நிகழ்வில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாவட்ட ஆட்சியர், கோவை மாவட்டத்தில் ஒரு வார காலம் போதை பொருள் எதிர்ப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளதாகவும் கல்லூரி மாணவ மாணவிகள் மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளதாக குறிப்பிட்டார். அதுமட்டுமின்றி பள்ளிகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்தார்.
மலுமிச்சம்பட்டியில் உள்ள இந்துஸ்தான் கல்லூரிக்கு அருகில் மாணவர்கள் தாக்கி சக மாணவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் அவரது பெற்றோர் கல்லூரிக்கு அருகில் போதை பொருள் விற்பனை நடைபெறுவதாக குற்றம் சாட்டியுள்ளது தொடர்பான கேள்விக்கு அது குறித்து காவல்துறையினர் விரிவான விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் அது போன்ற செயல்பாடுகள் இருந்தால் சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். மேலும் அந்த கொலை தொடர்பாக விரிவான விசாரணை நடைபெற்று வருவதாகவும் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.




