கோவை: நம் அண்டை மாவட்டத்தில் எல் நினோவின் தாக்கம் தென்பட்டு வரும் நிலையில், கோவை மக்கள் உஷாராக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
அண்மையில் நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சுமார் 1,400 பேர் உயிரிழந்த சோக சம்பவம் குறித்து நாம் அனைவரையும் உலுக்கியது. இத்தனை உயிர்கள் போன நிலையிலும், 5 ஆயிரம் பேரை இன்னும் காணவில்லை. அவர்களை தேடும் பணி தொடர்ந்து வருகிறது. இந்த சம்பவத்திற்கு இயற்கையின் சீற்றமே காரணமே என்று நாம் பழிபோட்டாலும், முழுக்க முழுக்க இது நாம் அனைவரும் செய்து வரும் மிகப்பெரிய தவறுகளின் விளைவுகளே ஆகும்.
மரங்களை வெட்டுகிறோம், காடுகளை அழித்து வீடுகளை கட்டுகிறோம். இதுபோன்று நிறைய சம்பவங்களை சொல்லலாம். இது எல்லாம் சாதாரணமாக கடந்து போகும் நமக்கு, இதன் பின்னணியில் இருந்த தாக்கம் தான் நேபாள விபத்திற்கு காரணம் என்பது எத்தனை பேருக்கு தெரியும். மரங்களை வெட்டியும், காடுகளை அழித்தும், காற்றை மாசுபடுத்தியும், புவியை மென்மேலும் வெப்பமாவதற்கு நாம் காரணமாகி வருகிறோம். இதன் காரணமாக பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகின்றன. இதுவே, நேபாளத்தில் இவ்வளவு பெரிய துயரம் ஏற்படுவதற்கான காரணங்களில் ஒன்றாக மாறியுள்ளது.
இந்த சம்பவத்தை இங்கு குறிப்பிடுவதற்கு, முக்கிய காரணம் இருக்கிறது. ஏனெனில் அண்டை நாடான நேபாளம் சந்தித்ததைப் போலவே, இந்தியாவும் தற்போது மிகப்பெரிய இயற்கை பேரிடரை சந்திக்க இருக்கிறது. அதன்பெயர் தான் எல் நினோ.
கடந்த சில தினங்களாகவே இந்த எல் நினோ பெயரை நாம் தொடர்ந்து கேட்டு வருகிறோம். இந்த எல் நினோ வேறு எந்த நாடுகளையும் விட, இந்தியாவை தான் அதிகம் தாக்குகிறது. எல் நினோவின் தாக்கம் ஏற்கனவே இந்தியாவில் எதிரொலித்து வருகிறது. வடமாநிலங்களில் கொட்டித் தீர்க்கும் கனமழையால், பெருவெள்ளம் ஏற்பட்டு வருகிறது.
எப்படி உருவாகிறது
எல் நினோ என்பது பசிபிக் பெருங்கடலில் நிகழும் ஒரு இயற்கையான காலநிலை மாற்ற நிகழ்வு ஆகும். இது உலகளாவிய வானிலை முறைகளில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்துகிறது. மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு நீர்ப்பகுதி வழக்கத்தை விட குறிப்பிடத்தக்க அளவு வெப்பமடையும் போது எல் நினோ உருவாகிறது.

பெரு நாட்டின் கடற்கரைப் பகுதிக்கு அருகில் கிறிஸ்துமஸ் காலப்பகுதியில் இது உக்கிரமடைவதால், ஸ்பானிஷ் மொழியில் ‘கிறிஸ்துமஸ் குழந்தை’ அல்லது ‘சிறிய சிறுவன்’ என்று பொருள்படும் ‘எல் நினோ’ எனப் பெயரிடப்பட்டது.
தாக்கம்
எல் நினோ நிகழ்வு ஏற்படும் ஆண்டுகளில், இந்தியப் பெருங்கடல் மற்றும் தென்மேற்கு பருவக்காற்று பலவீனமடைய வாய்ப்புள்ளது. இதனால் இந்தியாவில் வழக்கத்தை விடக் குறைந்த மழைப்பொழிவு மற்றும் வறட்சி ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. எல் நினோ ஆண்டின் காரணமாக உலகின் சில பகுதிகளில் கடுமையான வறட்சியும், காட்டுத் தீயும், சில பகுதிகளில் வழக்கத்திற்கு மாறான அதிகப்படியான கனமழையும் வெள்ளப்பெருக்கும் ஏற்படுகின்றன. இது உலகளாவிய விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு முறைகளையும் பெரிதும் பாதிக்கிறது.
மழையின்றி வறட்சி நிலவினால், விவசாயம் பாதிக்கப்பட்டு, விலைவாசி உயரும். அதுமட்டுமில்லாமல், பொருட்களின் தட்டுப்பாடு ஏற்படும். அதுமட்டுமில்லாமல், குடிநீர் பற்றாக்குறை ஏற்படலாம். இது மக்களை பெரிதும் பாதிக்கும். அதேபோல, அதிக மழை பெய்தாலும், விவசாயிகளும், விவசாயமும் அதிகம் பாதிக்கப்படுவார்கள். கனமழையினால் வெள்ளம் ஏற்பட்டு, குடிநீர் மற்றும் சுகாதார பாதிப்பு ஏற்படலாம். இதனால், குடிநீர் மூலமாக தொற்றுநோய்கள் அதிகம் பரவும் அபாயம் ஏற்படும்.
ஆபத்து அதிகம்
இந்த நிலையில், எல் நினோவால் இந்தியா அதிக சுகாதார பாதிப்புகளை எதிர்கொள்ளும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த ஆகஸ் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரையிலான காலகட்டத்தில் தெற்காசியாவில் பெரும்பாலான பகுதிகளில் வழக்கத்திற்கு மாறாக, அதிக வெப்பமும், குறைந்த மழைப்பொழிவும் பதிவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்பம் அதிகரிக்கும் போது, உடல் சோர்வு, வெப்ப பக்கவாதம், நீரிழிவு மற்றும் அதிகப்படியான வியர்வை வெளியேறுதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. நீண்ட நேரம் வெயிலில் வேலை செய்யும் கட்டுமானத் தொழிலாளர்கள், டெலிவரி ஊழியர்கள் மற்றும் குழந்தைகள், முதியவர்கள் என அனைவரும் கவனத்துடன் இருக்க வேண்டும்.
பாதுகாப்பு முக்கியம்
இருதய நோய் பிரச்சினை, ஆஸ்துமா உள்ளிட்ட சுவாசப் பிரச்சினை உள்ளவர்கள், சிறுநீரகக் கோளாறு இருப்பவர்களுக்கு இந்த அதீத வெப்பம், பெரும் பாதிப்பையும், சிரமத்தையும் ஏற்படுத்தலாம். எனவே, வெப்பம் அதிகமாக நிலவும் சமயங்களில், பொதுவெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். மேலும், வழக்கத்தை விட கூடுதலான தண்ணீரை குடிக்க வேண்டும்.
அதேபோல, எல் நினோ தாக்கத்தால் ஏற்படும் அதிக வெயில் மற்றும் மழைப்பொழிவால், கொசுக்களால் பரவும் நோய்களும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. டெங்கு, மலேரியா போன்ற நோய்களின் பாதிப்பும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. ஏற்கனவே, தலைநகர் டில்லியில் டெங்கு மற்றும் மலேரியா பாதிப்புகள் அதிரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இருப்பினும், டெங்கு மற்றும் மலேரியா காய்ச்சல் பரவுவதற்கு எல் நினோ மட்டுமே காரணமல்ல. கொசுக்களின் பெருக்கம், சுற்றுப்புறச் சுகாதாரமும் முக்கிய காரணங்களாகும்.
கோவையை நெருங்கியது
நம் அண்டை மலை மாவட்டமான நீலகிரியில் வழக்கமாக நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் தான் நீர் பனி காலநிலை உருவாகும். அதன்பிறகு, ஜனவரியில் உரைபனியின் தாக்கம் இருக்கும். ஆனால், இந்தாண்டு பருவமழை பொய்த்து போனதால், அணைகள் வறண்டு காணப்படுகின்றன.அதுமட்டுமில்லாமல், நவம்பரில் ஆரம்பமாகும் பனி காலநிலை, தற்போது துவங்கி விட்டது. உதகை, மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இதன் தாக்கம் காணப்படுகிறது.
நினைவு தெரிந்த காலம் முதல் இதுபோன்ற முன்கூட்டியே பனி துவங்கியது கிடையாது என்று கூறும் உள்ளூர் மக்கள், எல் நினோவின் தாக்கமாக இருக்கலாம் என்றும் சந்தேகத்துடன் கூறுகின்றனர். அண்டை மாவட்டத்தில் எல் நினோ தாக்கம் எதிரொலிக்கும் போது, நமது கோவையிலும் பாதிப்பை ஏற்படுத்த வெகு காலமில்லை. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், கோவை மக்கள் உஷார் நிலையில் இருக்க வேண்டும்.
என்ன செய்ய வேண்டும்
எல் நினோவால் ஏற்படக்கூடிய வானிலை மாற்றங்களை தொடர்ந்து கண்காணிப்பதுடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதாரத்துறையினர் மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களும், அதிக வெப்பம், கனமழை மற்றும் அதனால், ஏற்படும் நோய்களில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். எல் நினோ என்பது வானிலை மாற்றம் என்பதோடு இருந்து விடாமல், உடல்நலத்தில் நேரடியாக தாக்கத்தையும், பாதிப்பையும் ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து, வரும் நாட்களில் போதிய கவனத்துடன் பொதுமக்கள் இருப்பது மிகவும் அவசியமானதாகும்.

ஏற்கனவே, எல் நினோவில் மக்களை பாதுகாத்துக் கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. அதற்கு பொதுமக்கள் முழு ஆதரவு கொடுத்தால் மட்டுமே, நாம் அனைவரும் சேர்ந்து இந்த எல் நினோவிடம் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள முடியும்.




