கோவை: கோவை பீளமேடு பகுதியில் தனியார் துணிக்கடையில் இரவு ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகியது.
கோவை மாநகர் பீளமேடு ஹட்கோகாலனி பகுதியில் தனியாருக்கு சொந்தமான துணிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. இது குறித்து பீளமேடு போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பீளமேடு ஹட்கோகாலனி பகுதியில் மஹாவாராஹி அம்மன் ஜவுளி ஸ்டோர்ஸ் என்ற கடை இயங்கி வருகிறது. இங்கு குழந்தைகளுக்கான துணிகள், பெண்களுக்காக சுடிதார்கள், மெத்தைகள், போர்வைகள், உட்பட கிப்ட் பொருட்கள், ஸ்டேஷனரி பொருட்கள், செல்போன் சார்ஜர்கள், ஆகியவையும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் இரவு திடீரென கடையில் தீ விபத்து ஏற்பட்டு கடை முழுவதும் பற்றி எரியத் துவங்கி உள்ளது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக கடையின் உரிமையாளருக்கும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் அளித்தனர்.
தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் சுமார் 20 நிமிடங்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் கடையில் இருந்த சுமார் ஐந்து லட்சம் மதிப்பிலான துணி வகைகள் காலணிகள் ஸ்டேஷனரி பொருட்களாகியவை எரிந்து நாசமாகியதாக கூறப்படுகிறது.
இரவு நேரம் தீ விபத்து ஏற்பட்டதால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை. இதுகுறித்து பீளமேடு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


