கோவை: விரைந்து மக்கள் இயக்கமாக மாறி வரும் “பசுமை கவுண்டம்பாளையம்” திட்டத்தில், பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் உற்சாகமாக இணைந்து பசுமைப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
திட்டம் அறிவிக்கப்பட்டது முதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மரவளத்தை அதிகரிக்கும் இந்த முயற்சியில் பொதுமக்கள், இளைஞர்கள், தன்னார்வலர்கள், சமூக அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் ஆர்வமுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, தொகுதியின் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடுதல், அவற்றை பராமரித்தல், காலியாக உள்ள பொது இடங்களை பசுமையாக்குதல், பூங்காக்களை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மக்கள் பங்களிப்புடன் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனால், அரசு சார்பில் தொடங்கப்பட்ட இந்த முயற்சி தற்போது மக்கள் இயக்கமாக உருவெடுத்து வருகிறது.

இந்நிலையில், நரசிம்மநாயக்கன்பாளையம் டவுன் பஞ்சாயத்திற்குட்பட்ட சிறுவர் பூங்காவை பசுமையாக்கும் பணியில் டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் ஆனந்தன் தன்னார்வத்துடன் நேரடியாக ஈடுபட்டு வருகிறார். மரக்கன்றுகள் நடுதல், பராமரிப்பு, நீர்ப்பாசன வசதிகள் ஏற்படுத்துதல் மற்றும் பூங்காவை சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகளில் அவர் தீவிரமாக செயல்பட்டு வருவது பொதுமக்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.
அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து செயல்படும் இந்த முயற்சி, “பசுமை கவுண்டம்பாளையம்” திட்டத்திற்கு புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் தாக்கத்தால், தொகுதியின் பல்வேறு பகுதிகளிலும் இதுபோன்ற பசுமைப் பணிகளில் தன்னார்வத்துடன் ஈடுபடும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
எதிர்கால தலைமுறைக்கு பசுமையான, ஆரோக்கியமான மற்றும் நிலையான சுற்றுச்சூழலை உருவாக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட “பசுமை கவுண்டம்பாளையம்” திட்டம், தற்போது மக்கள் இயக்கமாக வளர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.





