கோவை: திமுக ஆட்சியில் கொண்டு வந்த UATT 2.0 திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தோட்டக்கலைத் துறை தொழில்நுட்ப அலுவலர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, தோட்டக்கலைத் துறை தொழில்நுட்ப அலுவலர்கள் மற்றும் களப்பணியாளர்கள் சார்பில், UATT 2.0 (உழவர் அலுவலர் தொடர்புத் திட்டம் 2.0)-ஐ ரத்து செய்ய வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த திட்டம் கடந்த திமுக ஆட்சியில் அவசர அவசரமாக கொண்டுவரப்பட்டதாகவும் இந்த திட்டம் என்பது உழவர்களின் வருமானத்தை ஈட்டி தரக்கூடிய தோட்டக்கலை வளர்ச்சியை பாதிக்கிறது, தோட்டக்கலை பட்டம் மற்றும் பட்டியதாரர்களின் எதிர்கால வாழ்வாதாரத்தை பாதிக்கிறது என்று தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி வல்லுனர் குழு மற்றும் சம்பந்தப்பட்ட துறையின் ஒப்புதல் இல்லாமல் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டதாகவும் குற்றம் சாட்டினர்.
இந்தத் திட்டத்தின் மூலம் தோட்டக்கலை, வேளாண்மை, வேளாண் பொறியியல், வேளாண் விற்பனை மற்றும் பிற துறைகளின் பணிகளை ஒரே களப்பணியாளர் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் கடும் பணிச்சுமை ஏற்படுவதோடு, விவசாயிகளுக்கு வழங்கப்படும் தொழில்நுட்ப சேவையின் தரமும் பாதிக்கப்படுவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
அடுத்த கட்டமாக சென்னை நகரில் தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக பட்ஜெட் வருவதற்கு முன்பு இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.




