கோவை: கோவையில் கார் அடமான பிரச்சனையில் ரூ.70 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை லஞ்ச ஒழிப்பு போலீசார், பொறி வைத்துப் பிடித்து, கையும் களவுமாகக் கைது செய்த சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி அருகே உள்ள மேலக்கரையை சேர்ந்தவர் ருஜைனா பாத்திமா. இவருடைய கணவர் புதிய கார் வாங்கி இருந்தார். பண பிரச்சினைக்காக அந்த காரை ரவிக்குமார் என்பவரிடம் அடமானம் வைத்ததாக தெரிகிறது. அந்த காரை ரவிக்குமார் சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்துவது ருஜைனா பாத்திமாவுக்கு தெரியவந்தது.
இதனால் ஒரு இடத்தில் ரவிக்குமார் நிறுத்தி இருந்த காரை, மாற்று சாவி மூலம் எடுத்து பொள்ளாச்சி பகுதியில் ருஜைனா பாத்திமா நிறுத்தி உள்ளார். இதுகுறித்து ரவிக்குமார், சிறப்பு படையை சேர்ந்த கோவை காட்டூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூபதியிடம் புகார் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து விசாரணை நடத்திய பூபதி, ருஜைனா பாத்திமா மற்றும் அவருடைய கணவர் ஆகியோரின் 2 செல்போன்களை பிடுங்கி வைத்துக்கொண்டதாக தெரிகிறது. கார் அடமான விவகாரத்தையும், 2 செல்போன்களை திரும்ப கொடுக்கவும் ரூ.70 ஆயிரத்தை லஞ்சமாகக் கொடுக்க வேண்டும் என்று சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூபதி, அந்த தம்பதியினரிடம் கேட்டதாக தெரிகிறது.
Also Read:Coimbatore power cut : ஜூலை 17-ல் கோவையில் மின் தடை
இதனால் அதிர்ச்சியடைந்த ருஜைனா பாத்திமா கோவை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு கூடுதல் துணை சூப்பிரண்டு ராஜேஷ், இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தினார்கள்.
இந்த சூழலில், லஞ்ச ஒழிப்புப் போலீசாரின் அறிவுறுத்தலின் பேரில் ருஜைனா பாத்திமா உக்கடம் பேருந்து நிலையத்திற்குச் சென்றார். அங்கிருந்து பூபதிக்கு செல்போனில் அழைத்த அவர், லஞ்ச பணத்தை வந்து பெற்றுக்கொள்ளுமாறும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூபதியிடம் தெரிவித்துள்ளார்.
லஞ்சத்தை வாங்க உக்கடம் பேருந்து நிலையத்துக்கு வந்து பூபதி, ரூ.70 ஆயிரத்தை பெற்றபோது, அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்த லஞ்சப் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூபதியை உக்கடம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார், லஞ்சம் வாங்கிய பூபதியை கைது செய்தனர். இந்த விவகாரம் கோவை போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Also Read: Power Cut In Coimbatore | நாளை 18.7.2026 மின் தடை பகுதிகள் ஏற்படும் வெளியீடு!





