கோவை: பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 124-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது கல்விச் சேவையையும் சமூக முன்னேற்றக் கொள்கைகளையும் போற்றும் வகையில், கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ், இளைஞர்களுக்கான Intern with MLA என்ற மக்கள் பங்கேற்பு முயற்சியின் கீழ், KGF (Kavundampalayam Governance Fellowship) என்ற புதிய ஆறு மாத நிர்வாக மற்றும் மக்கள் சேவைப் பயிற்சித் திட்டத்தை அறிவித்துள்ளார்.
21 முதல் 30 வயது வரை உள்ள இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள், பட்டதாரிகள் மற்றும் சமூக அக்கறை கொண்ட பொதுமக்கள் இந்தத் திட்டத்தில் பங்கேற்கலாம். தேர்வு செய்யப்படும் இளைஞர்கள், Intern with MLA திட்டத்தின் மூலம் சட்டமன்ற உறுப்பினருடன் நேரடியாக இணைந்து களப்பணிகளில் ஈடுபடுவதுடன், அரசு நலத்திட்டங்கள், மக்கள் குறைதீர்ப்பு, நிர்வாகச் செயல்பாடுகள், அலுவலக ஒருங்கிணைப்பு மற்றும் சமூக மேம்பாட்டுத் திட்டங்களை நேரடியாக அறிந்துகொள்ளும் அரிய வாய்ப்பைப் பெறுவார்கள்.
இந்த ஆறு மாத கால திட்டம் வெறும் வகுப்பறைக் கல்வியைத் தாண்டி, சமூகப் பொறுப்புணர்வு, குடிமைப் பண்புகள், தலைமைத்துவ திறன், நிர்வாகப் புரிதல் மற்றும் பொதுச் சேவை மனப்பான்மையை இளைஞர்களிடம் உருவாக்கும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும், பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்பவர்களுக்கு அதிகாரப்பூர்வ சான்றிதழ் மற்றும் உதவித்தொகை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து MLA கனிமொழி சந்தோஷ் கூறுகையில்:

“பெருந்தலைவர் காமராஜர் கல்வி மூலம் தலைமுறைகளை உருவாக்கிய தலைவர். அந்தச் சிந்தனையைத் தொடர்ந்து, இன்றைய இளைஞர்களுக்கு புத்தக அறிவோடு மட்டுமல்லாமல், மக்கள் வாழ்க்கையையும் அரசு நிர்வாகத்தையும் நேரடியாக அறியும் வாய்ப்பை வழங்க வேண்டும் என்பதற்காக ‘Intern with MLA’ என்ற முயற்சியின் கீழ் KGF – (Kavundampalayam Governance Fellowship) திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம்.
நாளைய சிறந்த மக்கள் பிரதிநிதிகள், நிர்வாகிகள் மற்றும் சமூகத் தலைவர்கள் இந்தத் திட்டத்தின் மூலம் உருவாக வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்.” என்றார்.
ஏற்கனவே கவுண்டம்பாளையம் தொகுதியில் செயல்பட்டு வரும் “பசுமை கவுண்டம்பாளையம்” உள்ளிட்ட மக்கள் நலத் திட்டங்களுடன் இணைந்து, Intern with MLA – KGF (Kavundampalayam Governance Fellowship) திட்டமும் இளைஞர்களின் பங்களிப்பை அதிகரித்து, மக்கள் மையப்படுத்தப்பட்ட நிர்வாகத்திற்கு புதிய முன்னுதாரணமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





