கோவை: கோவையில் விஜய்யின் ஜனநாயகன் படம் பார்த்த அமைச்சர்கள் சம்பத்குமார் மற்றும் விக்னேஷ் கண்ணீர் வடித்த வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் நீண்ட காத்திருப்பிற்குப் பின் இன்று வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள தவெக தொண்டர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அமைச்சர்கள் பலரும் ஜனநாயகன் படம் பார்த்து தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, கோவை கங்கா தியேட்டரில் அமைச்சர் சம்பத்குமாரும், போத்தனூர் அரசன் தியேட்டரில் அமைச்சர் விக்னேஷ்குமாரும் படம் பார்க்கச் சென்றனர்.
முன்னதாக அமைச்சர் விக்னேஷ் சென்ற தியேட்டரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கெடுபிடி காட்டப்பட்டது. வாயிலுக்கு வெளியே துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
Also Read: கோவையில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்! இதெல்லாம் ஒரு பொழப்பா… நெட்டிசன்கள் விளாசல்…
விக்னேஷ் விசிலடித்து படம் பார்க்க காவல்துறையைப் பயன்படுத்துவதா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், திரையரங்கிற்கு வந்த அவர் அரசு வாகனத்தைப் பயன்படுத்தி வந்ததும், காரில் தேசியக் கொடி கட்டியபடி தியேட்டருக்குள் வந்து நிறுத்திவிட்டு படம் பார்த்ததும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, முதலமைச்சர் விஜய்யின் கடைசி படம் என்று அறிவிக்கப்பட்ட ஜனநாயகன் படத்தைப் பார்த்த அமைச்சர்கள், தியேட்டருக்குள்ளேயே அமர்ந்து அழுதனர்.
VIDEO
தங்களது தலைவரை கடைசியாக திரையரங்கில் பார்க்கிறோம் என்பதை உணர்ந்து இருவரும் கண்கள் கலங்கிய அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.





