கோவை: ஹிந்துஸ்தான் கல்லூரி மாணவர் கொலையை கண்டித்து கோவையில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, திமுக மாணவரணி சார்பில் கல்லூரி அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஹிந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவர் அமுதன், சக மாணவர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் சட்டப்பேரவையிலும் எதிரொலித்தது.
இந்நிலையில், மாணவர் படுகொலையை கண்டித்தும், கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும் திமுக மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, தவெக அரசுக்கு எதிராகவும், மாணவர் பாதுகாப்பை வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.
இந்த கொலை வழக்கில் 17 வயது சிறுவன் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் சிலர் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆர்ப்பாட்டத்தையொட்டி அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.





