கோவை: திமுக கூட்டணிக்கு ஆதரவு, வந்தே மாதரம் பாடலை திரும்ப பெறுதல் உள்ளிட்ட தீர்மானங்கள் தந்தை பெரியார் திராவிடர் கழக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
கோவை காந்திபுரத்தில் உள்ள பெரியார் படிப்பகத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
அக்கழகத்தின் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள் மாநில நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டு இக்கழகத்தின் செயல்பாடுகள் குறித்தும், கழகத்தை மேம்படுத்துவது குறித்தும் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
மேலும் இந்த கூட்டத்தில் திமுக கூட்டணியை ஆதரிப்பது, வந்தே மாதரம் பாடலை திரும்பப் பெறுவது குறித்தான பிரச்சார இயக்கம், பாடத்திட்டத்தில் சமூக நீதி வரலாறு பாடத்தை இடம்பெற செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களில் முதலாவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மொத்த தலைவர் நல்லகண்ணு மறைவிற்கும் கோவையை சேர்ந்த முளைச்சாவு அடைந்து உடல் உறுப்பு தானம் செய்த சிறுமி வெண்பாவிற்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை ஆதரிப்பது, தென் மாவட்டங்களில் சாதி வெறியை தடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பது, வந்தே மாதரம் பாடலை முழுமையாக பாடுவது என்ற உத்தரவை திரும்ப பெறுவது, தமிழ்நாடு அரசு பள்ளிகளில் சாதி மதத்தை மையமாக கொண்டு நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிப்பதை வரவேற்பது,
தமிழ்நாட்டின் பாடத்திட்டத்தில் ஆரம்ப பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை சமூகநீதி, சமத்துவ வரலாற்றை பாடங்களாக சேர்ப்பது, கோவையில் பெரியார் அறிவுலகம் அமைத்திட்ட முதலமைச்சருக்கும் தமிழ்நாடு அரசுக்கும் நன்றி தெரிவித்தல், சாதி பெயரில் இயங்கும் திருமண தகவல் மையங்களை தடை செய்ய வேண்டும், மே மாதத்தில் தமிழ்நாட்டின் பெரியாரியல் பயிற்சி முகாம் நடத்துவது ஆகிய 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.





