கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நள்ளிரவில் வீடு புகுந்த மர்மக் கும்பல் 22 வயது வாலிபரை அரிவாளால் வெட்டியும், சுத்தியலால் தாக்கியும் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அஸ்வின் (22). இவர் நேற்று நள்ளிரவு சுமார் 2 மணி அளவில், தனது வீட்டில் கழுத்தில் கத்திக்குத்து மற்றும் வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்து உள்ளார்.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து விரைந்து வந்த கிணத்துக்கடவு காவல் நிலையப் போலிசார், அஸ்வினின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகப் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த மாதேஷ் (22) மற்றும் 16 வயது சிறுவன் ஆகிய இருவருக்கும் அஸ்வினுக்கும் இடையே மது அருந்துவது தொடர்பான பழக்கத்தில் ஏற்கனவே முன்விரோதம் இருந்தது தெரியவந்து உள்ளது. மேலும், இது தொடர்பாகக் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாதேஷை அஸ்வின் எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் கடும் ஆத்திரத்தில் இருந்த மாதேஷ் மற்றும் அந்த 16 வயது சிறுவன் ஆகிய இருவரும் சேர்ந்து, நேற்று நள்ளிரவு அஸ்வின் தூங்கிக் கொண்டு இருந்த போது அவரது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து உள்ளனர். பின்னர் தாங்கள் மறைத்து வைத்து இருந்த சுத்தியல் மற்றும் அரிவாளால் அஸ்வினைச் சரமாரியாக வெட்டியும் தாக்கியும் கொடூரமாகக் கொலை செய்து விட்டு அங்கு இருந்து தப்பியோடி உள்ளனர்.
VIDEO
தற்போது தப்பியோடிய மாதேஷ் மற்றும் 16 வயது சிறுவனைப் பிடிக்கக் கிணத்துக்கடவு போலிசார் தனிப்படை அமைத்துத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
நள்ளிரவில் வீடு புகுந்து வாலிபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இதனிடயே கொலை செய்த வீடியோவையும், கொலை செய்ய பயன்படுத்திய ஆயுதங்களை வாயில் கடித்து போஸ் கொடுத்தவாறும் போட்டோ, வீடியோக்களை அந்த கொடூரர்கள் இண்ஸ்டாகிராமில் பதிவிட்டதாகத் தெரிகிறது. அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





