கோவை: கோவை மெட்ரோ ரயில் சேவை குறித்து புதிய வரையறைகளை மத்திய அரசுக்கு கொடுத்த இருப்பதாக அமைச்சர் சம்பத் குமார் தெரிவித்துள்ளார்.
கோவை காந்திபுரம் 68வது வார்டு தமிழக வெற்றி கழகம் கட்சி அலுவலகம் திறப்பு நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் கலந்து கொண்டு நிகழ்வில் பொதுமக்களுக்கும் பள்ளி குழந்தைகளுக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் சிறப்பு உரையாற்றிய அமைச்சர் சம்பத்குமார், தற்பொழுது முதல்வர் விஜய் இந்த நிலைக்கு வந்தது என்பது இரண்டு வருட காலத்தில் நடந்தது கிடையாது, கடந்த 30 வருட காலமாகவே தமிழக வெற்றி கழகத்திற்கு முன்பிருந்து எங்கள் இயக்கம் சார்பில் மக்கள் பணியாற்றி வந்தது தான் என்று தெரிவித்தார்.

எப்பொழுதும் எங்கள் கட்சியினர் அவர்களது சொந்த காசை போட்டு தான் அனைத்து நிகழ்ச்சிகளையும் செய்து வருவதாகவும் மக்களிடம் திருட வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு கிடையாது விஞ்ஞான பூர்வமாக எவ்வாறு ஊழல் செய்யலாம் என்று எண்ணிக் கொண்டிருக்க கூடிய அரசியல்வாதிகள் மத்தியில் எங்களுடைய காசை மக்களுக்காக செலவு செய்வது என்பது தான் எங்களை உயர்த்தும் என்று தெரிவித்தார்.
கோவை தெற்கு தொகுதி ஏறத்தாழ 1800 வாக்குகள் வித்தியாசத்தில் தான் நமக்கு கிடைக்காமல் போய்விட்டது இன்னும் ஆறு மாதத்தில் உள்ளாட்சி தேர்தல் வரப்போகிறது இங்கு இருக்கக்கூடிய அனைத்து வார்டுகளையும் தமிழக வெற்றி கழகத்தின் வார்டுகளாக மாற்றி கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது கோவை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை மீண்டும் மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டது தொடர்பான கேள்விக்கு அது பழைய ஆட்சியில் கொடுக்கப்பட்டது தற்பொழுது மீண்டும் புதிய வரையறைகளை கொடுக்க உள்ளோம் அதனை ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்தார். கோவை மாவட்டத்திற்கு மெட்ரோ ரயில் கொண்டு வருவது என்பது தமிழக வெற்றி கழகம் மற்றும் முதலமைச்சரின் உறுதியான முடிவு என்றும் அதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் என்று தெரிவித்தார்.
நீட் தேர்வால் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கையை முன் வைத்துள்ளது தொடர்பான கேள்விக்கு, தேர்தலுக்கு முன்பு இது குறித்து நாங்கள் கூறிய நிலைப்பாட்டில் தான் தற்பொழுதும் உள்ளதாகவும் ஒவ்வொரு முறையும் நிலைப்பாட்டை முதல்வர் மாற்ற மாட்டார் என்றார். கம்யூனிஸ்ட் கட்சி,விசிக ஒருங்கிணைத்த நீட் எதிர்ப்பு போராட்டத்தில் திமுக GenZ கிட்ஸ் கலந்து கொண்டதாக அமைச்சர் நிர்மல் குமார் கூறியுள்ளது தொடர்பான கேள்விக்கு அது GenZ கிட்ஸ் என்ற போர்வையில் திமுக நடத்தும் நாடகம் என்று அனைத்து மக்களுக்கும் தெரிந்த விஷயம் தான் என்றும் திமுகவினர்களால் முதலமைச்சர் ஆட்சியில் குறை கண்டுபிடிக்க முடியாது என்பதால் அவர்களால் செயல்படுத்த முடியாத திட்டங்களை தற்பொழுது GenZ கிட்ஸ் என்ற போர்வையில் பிரபலப்படுத்த நினைப்பதாக தெரிவித்தார். எனவே அவற்றையெல்லாம் புறம் தள்ளிவிட்டு மக்களுக்கான சேவைகளையும் தேவைகளையும் செய்யக்கூடிய அரசாங்கம் முதல்வரின் அரசு செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.
நீட் தேர்வால் தற்கொலைகள் என்பது தொடர்ந்து வருவது தொடர்பான கேள்விக்கு முதல்வர் இது குறித்து ஏற்கனவே தெரிவித்திருக்கிறார் என்றும் நீட்க்கு பிறகு எதுவுமே இல்லை என்று இல்லை இதற்குப் பிறகும் வாழ்க்கை உள்ளது அனைவருக்கும் ஒவ்வொரு திறமைகள் உள்ளது ஒவ்வொரு எதிர்காலம் உள்ளது ஒரு விஷயம் கிடைக்கவில்லை என்பதற்காக தவறான வழிகளுக்கு சென்று விடக்கூடாது என்று இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பே மாணவ மாணவிகளுக்கும் அவருடைய பெற்றோர்களுக்கும் முதல்வர் கூறி இருக்கிறார் என்றார்.
நம்முடைய மாணவர்களை நம்பித்தான் இந்த நாடு இருப்பதாகவும் அவர்களுக்கான வாய்ப்புகள் இந்தியாவில் கொட்டி கிடப்பதாகவும் சுட்டிக்காட்டிய அவர் எனவே தவறான முடிவுகளை எடுக்க வேண்டாம் என்று அமைச்சர் சம்பத்குமார் கேட்டுக் கொண்டார். மேலும் மாணவர்களின் பள்ளி காலங்களில் இது குறித்து கவுன்சிலிங் அளிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.
ஆர்.பி.உதயக்குமார் இரண்டு மாத காலத்தில் தமிழக வெற்றிக் கழக அரசு மத்திய அரசிடம் வாங்கிய கடன் தொடர்பாக பேசியது குறித்தான கேள்விக்கு, தமிழக முதல்வர் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த உடனேயே நிதி தொடர்பால வெள்ளை அறிக்கை கொடுக்கப்பட்டது என்றும் இக்கட்டான சூழலிலும் மக்களின் தேவைகளை நிறுத்தி விடக்கூடாது அதனால் கடன் வாங்க வேண்டிய சூழல் இருந்தது என்றும் எந்த சூழலிலும் மக்களுக்கான தேவைகள் நின்று விடக்கூடாது என்றார்.





