கோவை: கோவை உக்கடம் பகுதியில் செயல்பட்டு வரும் மொத்த மீன் மார்க்கெட்டில், மீன் வரத்து குறைந்ததால் மீன்களின் விலை சற்றே உயர்ந்துள்ளது. இருந்தபோதிலும், வார இறுதியை முன்னிட்டு பொதுமக்கள் அதிக அளவில் திரண்டு மீன்களை வாங்கிச் சென்றனர்.
கோவை உக்கடம் மொத்த மீன் மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் நாகை, காரைக்கால், ராமேஸ்வரம், நாகர்கோயில், தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களிலிருந்தும், அண்டை மாநிலமான கேரளாவிலிருந்தும் தினமும் மீன்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.
தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்து, மீனவர்கள் மீண்டும் மீன்பிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், தற்போது கேரளாவில் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளது.
இதன் காரணமாக கேரளாவில் இருந்து வரும் மீன்களின் வரத்து குறைந்துள்ளதால், உக்கடம் மொத்த மீன் மார்க்கெட்டிற்கும் மீன்களின் வரத்து வழக்கத்தை விட குறைந்துள்ளது.
இதன் காரணமாக மீன்களின் விலையும் சற்று உயர்ந்துள்ளது. வழக்கமாக கிலோ ரூ.150-க்கு விற்பனையாகும் மத்தி மீன் தற்போது ரூ.250-க்கு விற்பனையாகி வருகிறது. சங்கரா மீன் கிலோ ரூ.350-க்கும், ஊளி மற்றும் பேபி வஞ்சிரம் தலா ரூ.250-க்கும், வஞ்சிரம் ரூ.850-க்கும், கிளி மீன் ரூ.500-க்கும், நெத்திலி மற்றும் கிழங்கா தலா ரூ.300-க்கும் விற்பனையாகி வருகின்றன. மேலும், நண்டு கிலோ ரூ.250 முதல் ரூ.300 வரை விற்பனை செய்யப்படுகிறது.
டேம் மீன்கள் விலையில் எந்த மாற்றமும் இல்லை. டேம் வாவல் மற்றும் நெய் மீன் கிலோ ரூ.120 முதல் ரூ.150க்கும் விற்பனையாகிறது.
ஆடி மாதம் காற்று அதிகமாக உள்ளதால் கடலுக்குள் மீனவர்கள் படகை செலுத்த முடியாத நிலை இருப்பதால் மீன் வரத்து குறைந்துள்ளதாக மீன் வியாபாரிகள் தெரிவித்தனர்.
விலை உயர்ந்திருந்தாலும், இறைச்சி பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் திரண்டு மீன்களை ஆர்வமுடன் வாங்கிச் சென்றதால், கோவை உக்கடம் மீன் மார்க்கெட் மக்கள் கூட்டத்தால் களைகட்டியது. வார இறுதியை முன்னிட்டு காலை முதலே விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், மீன் வரத்து குறைந்தபோதும் விற்பனை பாதிக்கப்படாமல் பரபரப்பாக காணப்பட்டது.





