கோவை: கோவையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வாகன ஓட்டிகளை கடுமையாக சிரமப்படுத்தி வந்த சாய்பாபா காலனி போக்குவரத்து நெரிசலுக்கு தற்போது தீர்வு கிடைத்துள்ளது.
சாய்பாபா கோவில் சந்திப்பில் ரூ.75 கோடி மதிப்பீட்டில், 1.2 கிலோமீட்டர் நீளத்தில் அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலம் சோதனை அடிப்படையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த மேம்பாலத்தின் கட்டுமானப் பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், அந்த காலகட்டத்தில் சாய்பாபா காலனி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தினமும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அலுவலகம், பள்ளி, கல்லூரி செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் நீண்ட நேரம் போக்குவரத்தில் சிக்கி பெரும் அவதியடைந்தனர்.
இந்த நிலையில், கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து நேற்று இரவு மேம்பாலம் சோதனை அடிப்படையில் திறக்கப்பட்டது.
பாலம் திறக்கப்பட்டவுடன் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் ஏராளமானோர் மேம்பாலத்தில் உற்சாகமாக பயணித்தனர். புதிய பாலத்தில் பயணித்த அனுபவத்தை மகிழ்ச்சியுடன் பகிர்ந்த பொதுமக்கள், நீண்ட நாள் காத்திருப்புக்கு தற்போது முடிவு கிடைத்துள்ளதாக தெரிவித்தனர்.
இந்த உயர்மட்ட மேம்பாலம் முழுமையாக பயன்பாட்டிற்கு வந்ததன் மூலம், சாய்பாபா கோவில் சந்திப்பு பகுதியில் நீண்ட காலமாக நிலவி வந்த போக்குவரத்து நெரிசல் பெருமளவில் குறையும் என்றும், தினசரி பயணம் மேலும் எளிதாகும் என்றும் பொதுமக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
VIDEO





