கோவை: கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் பின்னோக்கி (Reverse) இயக்கப்பட்ட அரசு பேருந்தை, மதுபோதையில் இருந்த நபர் ஒருவர் தனது கைகளால் தள்ளுவது போல் நடித்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி சிரிப்பலையை ஏற்படுத்தி வருகிறது.
சிங்காநல்லூர் பேருந்து நிலையம் எப்போதும் பயணிகள் மற்றும் பேருந்துகளின் வருகை, புறப்பாடு காரணமாக பரபரப்பாக காணப்படும். இந்நிலையில், ஓட்டுநர் ஒருவர் பேருந்தை நிறுத்துவதற்காக மெதுவாக பின்னோக்கி இயக்கியுள்ளார்.
அப்போது பேருந்து நிலையத்தில் மதுபோதையில் இருந்ததாக கூறப்படும் நபர் ஒருவர், பின்னோக்கி நகர்ந்து கொண்டிருந்த பேருந்தின் முன்பகுதிக்குச் சென்று, தனது கைகளால் பேருந்தை தள்ளுவது போல் செயல்பட்டுள்ளார்.
பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டில் மெதுவாக பின்னோக்கி சென்று கொண்டிருக்க, அந்த நபர் தனது முழு பலத்தையும் பயன்படுத்தி பேருந்தை தள்ளுவது போல் நடித்துள்ளார். இந்த வேடிக்கையான காட்சியை அங்கிருந்த பயணி ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், “சிங்காநல்லூர் பாகுபலி”, “இவர் தள்ளியதால்தான் பேருந்து ரிவர்ஸ் போனது”, “மது போதையிலும் இப்படியொரு மாஸ் சிந்தனையா?” என பல்வேறு நகைச்சுவையான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
video
எனினும், நகர்ந்து கொண்டிருக்கும் கனரக பேருந்தின் முன்பகுதியில் மதுபோதையில் நின்று கொண்டு இதுபோன்று செய்வது ஆபத்தானது என்றும், எதிர்பாராத அசம்பாவிதம் எதுவும் ஏற்படாமல் அந்த நபர் அதிர்ஷ்டவசமாக தப்பியதாகவும் வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர்.





