கோவை: தேர்தல் வாக்குறுதியில் கூறியதை போலவே மாநில பயிர் கடனை தள்ளுபடி செய்ய வேண்டுமென்றும் அதுவரை கூட்டுறவு வங்கிகள் கடனை வசூல் செய்யக்கூடாது என வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
தமிழக வெற்றிக் கழக அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறியதை போலவே விவசாயிகளின் பயிர் கடன்களை எந்தவித நிபந்தனைகளும் இன்றி முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேர்தல் வாக்குறுதியின்படி தமிழக முதலமைச்சர் விஜய், விவசாயிகளின் பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டு முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு, பயிர் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர். இச்சங்கத்தின் தலைவர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக முதல்வர் விஜய் விவசாயிகள் பக்கம் தான் நிற்பேன் என்று கூறியுள்ள நிலையில் உடனடியாக தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.
முதல்வர் கூறாததை விவசாயிகள் கேட்கவில்லை என்றும் முதல்வர் தேர்தல் வாக்குறுதியாக கூறியதை தான் கேட்கிறோம் என்று தெரிவித்த அவர் அடுத்து வரும் தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரில் விவசாயிகள் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதே சமயம் அதுவரை எந்த ஒரு கூட்டுறவு வங்கிகளும் விவசாயிகளிடம் கடனை வசூல் செய்ய கூடாது எனவும் கேட்டுக் கொண்டார்.




