கோவை: கோவையில் நாட்டு வெடி கடித்து காளை மாடு படுகாயம் அடைந்த நிலையில் விவசாயி கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவையில் காட்டுப்பன்றியை வேட்டையாடுவதற்காக வைக்கப்பட்ட நாட்டு வெடியைக் கடித்த காளை மாடு ஒன்று வாய் சிதைந்து படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை மாவட்டம் பேரூர் அடுத்த கரடிமடை பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி (65). இவர் நேற்று (11.08.2026) காலை 10 மணி அளவில் தனது இரண்டு காளை மாடுகளை அப்பகுதியில் உள்ள எள் காட்டில் மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது, அங்கு வீசப்பட்டிருந்த “அவுட்டுகாய்” என்றழைக்கப்படும் நாட்டு வெடியை ஒரு காளை மாடு எதிர்பாராதவிதமாக கடித்துள்ளது. இதில் வெடி பயங்கர சத்தத்துடன் வெடித்து, காளையின் வாய் பகுதி பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்தது.
இப்பகுதியில் கால்நடைகள் தொடர்ந்து மேய்ந்து வருவதால், வேட்டைக்காக வெடி வைக்க வேண்டாம் என பழனிசாமி ஏற்கனவே எச்சரித்திருந்தும், அதே பகுதியைச் சேர்ந்த ராயன் (70) என்பவர் காட்டுப்பன்றிகளை வேட்டையாடுவதற்காக இந்த நாட்டு வெடியை வைத்தது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்து தகவலறிந்த வனத்துறை அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ராயனைப் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும், அவரது வீட்டிலிருந்து சில நாட்டு வெடிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, மாட்டை காயப்படுத்தியதோடு சட்டவிரோதமாக நாட்டு வெடி வைத்திருந்த குற்றத்திற்காக 70 வயதான ராயன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். காயமடைந்த காளை மாட்டிற்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.





