கோவை: கோவை உக்கடம் பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஸ்டாண்டில் முதியவர்களை ஆட்டோ ஓட்டுநர்கள் தாக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாநகர் உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து பொள்ளாச்சி, கேரளா, பழனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு நூற்றுக்கணக்கான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் உக்கடம் பேருந்து நிலையம் கோவை மாநகரில் முக்கிய பேருந்து நிலையமாக உள்ளது.
அதே சமயம் பேருந்து நிலையத்திற்கு வெளியே ஆட்டோ ஸ்டாண்டுகளும் உள்ளன. இந்நிலையில் இன்று காலை ஆட்டோவில் இரண்டு முதியவர்கள் ஏறிய நிலையில் ஆட்டோ ஓட்டுநர் வாடகைக்கு அதிக பணம் கேட்டதாக தெரிகிறது.
இதில் ஆட்டோ ஓட்டுநருக்கும் அந்த முதியவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது அந்த வயதான தம்பதியினரை ஓட்டுநர் ஆட்டோவில் இருந்து வெளியேற்றி உள்ளார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறி உள்ளது.
அதில் ஆட்டோ ஓட்டுநர் வயது முதிந்த அந்த பெண்ணை கன்னத்தில் அறைந்துள்ளார். அவருடன் சேர்ந்து சக ஆட்டோ ஓட்டுநர்களும் இரண்டு முதியவர்களையும் தாக்கி கடுமையான சொற்களால் திட்டியுள்ளனர்.
இதனை அங்கிருந்த ஒருவர் அவரது செல்போனில் வீடியோ பதிவு செய்த நிலையில் தற்போது அந்த காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.





Comments are closed.