கோவை : கோவை உக்கடம் பகுதியில் மண்ணெண்ணெய் ஸ்டவ்வை பற்றவைத்தபோது எதிர்பாராதவிதமாக சேலையில் தீப்பற்றி காயமடைந்த பெண், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கோவை தெற்கு உக்கடம், வி.எச். ரோடு பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி கீதாஞ்சலி (36). இவர் சம்பவத்தன்று இரவு வீட்டின் சமையலறையில் சமையல் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது மண்ணெண்ணெய் ஸ்டவ்வை பற்றவைத்ததுடன், தனது தந்தை முத்துசாமியிடம் செல்போனில் பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அந்த நேரத்தில் எதிர்பாராதவிதமாக கீதாஞ்சலியின் சேலையில் தீப்பற்றியுள்ளது. சிறிது நேரத்தில் தீ வேகமாக பரவியதால், அதிர்ச்சியடைந்த அவர் உதவிக்காக அலறியுள்ளார்.
அவரது சத்தம் கேட்டு குடும்பத்தினர் உடனடியாக சமையலறைக்கு ஓடி வந்தனர். பின்னர் தீயை அணைத்து, தீக்காயமடைந்த கீதாஞ்சலியை மீட்டனர்.
தொடர்ந்து அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட கீதாஞ்சலிக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர்.
Also Read: கோவை பாரில் குடிபோதையில் மோதல்: பயங்கரமான Fight காட்சிகள் உள்ளே!
இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த கீதாஞ்சலி நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அவரது குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஸ்டவ்வை பற்றவைத்தபோது ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





