கோவை: கோவையில் பெண் யானை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம், மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட காப்புக்காடு பகுதியில், வயதான பெண் காட்டு யானை ஒன்று இன்று உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.
கோவை, மதுக்கரை வனச்சரகம், நவக்கரை பிரிவு, எட்டிமடை சுற்றுக்கு உட்பட்ட போளுவாம்பட்டி பிளாக் 1, திமில் மலை காப்புக்காடு பகுதியில் வனப்பணியாளர்கள் இன்று வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது, ஒரு பெண் யானை அசைவற்றுக் கிடப்பதைக் கண்டு உயர் அதிகாரிகளுக்குத் தகவல் அளித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் யானையை ஆய்வு செய்தனர். உயிரிழந்தது ஒரு வயதான ஒற்றை பெண் யானை என்பது உறுதி செய்யப்பட்டது.
யானையின் உடலில் காயங்களோ ? அல்லது எவ்வித வெளிக் காயங்களோ ? இல்லை என்பது முதற்கட்ட ஆய்வில் தெரியவந்து உள்ளது.
இயற்கை மரணமாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
யானையின் உயிரிழப்பிற்கான துல்லியமான காரணத்தைக் கண்டறிய, மாவட்ட வன அலுவலர் (DFO) நேரடி மேற்பார்வையில், வன மருத்துவக் குழுவினர் முன்னிலையில் முறையான உடற்கூறு ஆய்வு (Post-mortem) செய்யப்படும்.
பிரேத பரிசோதனைக்குப் பிறகே யானையின் இறப்பிற்கான முழுமையான காரணம் தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

