கோவை: கோவை அருகே செந்நாய் கூட்டமும் காட்டுபன்றிகளும் ஒன்றையொன்று வேட்டையாடும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.
கோவையின் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகளவு உள்ளது. அடிக்கடி வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் காட்டுயானைகள், காட்டுபன்றிகள் போன்ற வனவிலங்குகள் விவசாய நிலங்களை சேதப்படுத்தி செல்கின்றன. இதனால் விவசாயிகள் கடும் நெருக்கடிகளுக்கு ஆளாகின்றனர்.
இந்த நிலையில் கோவை மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டி வடிவேலம்பாளையம் மலை அடிவாரப் பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட காட்டுப் பன்றிகள் கூட்டமாக மேய்ந்து கொண்டு இருந்த போது, அவற்றை வேட்டையாட 10-க்கும் மேற்பட்ட செந்நாய்கள் கூட்டம் வந்த நிலையில் அந்த செந்நாய் கூட்டம், பன்றிகளின் கூட்டத்திற்குள் புகுந்து ஒரு குட்டியை கவ்விப் பிடித்துள்ளது.
அதனால் காட்டுப்பன்றிகளும் செந்நாய் கூட்டத்தை தாக்கின. செந்நாய் கூட்டமும் காட்டுபன்றி கூட்டமும் ஒன்றையொன்று தாக்கி கொண்ட நிலையில் அங்கிருந்தவர்கள் அதனை செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளனர். தற்போது அந்த காட்சிகள் வைரலாகி வருகிறது.
கோவையில் காட்டுயானை, காட்டுபன்றிகளை தொடர்ந்து தற்போது செந்நாய் கூட்டமும் வனப்பகுதியில் இருந்து வெளியேறி ஊருக்கு அருகாமையில் வந்துள்ளது விவசாயிகள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
coimbatore-wild-dogs-wild-boar-hunt-video-viral

