கோவை: எங்க ரூட்டே தனி, மெயின் பிக்சரே தி.மு.க தான் என்று என த.வெ.க மாநிலப் பொதுச் செயலாளர் அருண் ராஜ் கோவையில் தெரிவித்துள்ளார்.
கோவை, கணியூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் குழு சார்பில் பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் அருண் ராஜ், அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
மதுரை மற்றும் கடலூரைத் தொடர்ந்து கோவையிலும் மக்கள் சந்திப்பு சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. மற்ற கட்சிகளை விட மக்கள் தமிழக வெற்றி கழகத்தை ஆழமாக நம்புகின்றனர்.
வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் கொள்கை அடிப்படையிலானது. அரசியல் மற்றும் கொள்கை ரீதியாகத் தெளிவாக இருக்கும். நாங்கள் நிச்சயம் திமுகவை வீழ்த்துவோம்.
எங்களது நேரடி எதிரி தி.மு.க தான். சிறுபான்மையினரை தி.மு.க அரசு கிள்ளுக்கீரையாக நினைக்கிறது. கடந்த தேர்தலில் அவர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றி வருகின்றனர்.
மேலும், எங்கள் தலைவர் விஜய் தான் சிறுபான்மையினரின் உண்மையான தலைவராக இருப்பார். தமிழக காவல்துறை வெளியிட்டு உள்ள பொதுக் கூட்டங்களுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் (SOP) முழுக்க, முழுக்க தமிழக வெற்றி கழகத்திற்கு எதிராகவே உள்ளது.
குறிப்பாக, வேலூரில் மக்கள் சந்திப்பு நடத்த அனுமதி கோரிய அடுத்த நாளே, முதல்வர் வருகையைக் காரணம் காட்டி அனுமதி மறுக்கப்பட்டது. இந்த விதிமுறைகள் பாரபட்சமாக இருக்கின்றன. 50 ஆயிரம் பேர் கூடும் நிகழ்விற்கு 30 நாட்களுக்கு முன்பே அனுமதி கேட்க வேண்டும் என்பதும், திடலைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் ஏற்பாட்டாளர்களே பொறுப்பேற்க வேண்டும் என்பதும் நடைமுறைக்குச் சாத்தியமில்லாத ஒன்று. காவல்துறையும் அரசும் எங்கள் மீது கட்டுப்பாடுகளைத் திணிக்கப் பார்க்கின்றனர்.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும் என்ற விதியே த.வெ.க-வை குறிவைத்துத் தான் சேர்க்கப்பட்டு உள்ளது. அரசு எத்தகைய முட்டுக்கட்டைகளைப் போட்டாலும் அவற்றை உடைத்துத் தேர்தலைச் சந்திப்போம்.
இவ்வாறு அருண் ராஜ் கூறினார்.


En vazhi thaneee vazhi…ana poruki pasanga vazhi…