கோவை: சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி நடைபெற்ற மாரத்தான் போட்டியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.
பசுமை கட்டிடங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் விதமாக கட்டுமான நிறுவனங்களின் கூட்டமைப்பு சார்பில் கிரீன் பில்ட் ரன் எனும் மாரத்தான் போட்டி கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்றது.
இந்த மாரத்தான் போட்டியை கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் தலைவர் பொன்குமார் ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.
பசுமையான சுற்றுச்சூழலுக்காக ஓடுங்கள் என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியில் கட்டுமானத் துறை சார்ந்தவர்கள், பொறியாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியில் 5 கிலோ மீட்டர் இரண்டு கிலோமீட்டர் என இரண்டு பிரிவுகளாக நடைபெற்ற இதில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் தலைவர் பொன்குமார் , பசுமை கட்டிடங்கள், ஆற்றல் சேமிப்பு, நிலைத்த வளர்ச்சி போன்றவை இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவசியமானவை என தெரிவித்த அவர் சுற்றுச்சூழலை பாதுகாக்க அனைவரும் வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்க வேண்டும் என வலியுறுத்தினர்.

