கோவை: பொது வேலை நிறுத்தம் எதிரொலியாக கோவை உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து கேரளாவிற்கு செல்லும் பேருந்துகள் இன்று முழுமையாக இயக்கப்படவில்லை.
நான்கு தொழிலாளர் சட்டங்களை நீக்கக் கோரி நாடு தழுவிய பொதுவேலை நிறுத்தத்திற்கு கேரள அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் முழு ஆதரவு அளித்துள்ளனர்.
இதனால் கேரளாவின் பெரும்பாலான பகுதிகளில் அரசுப் பேருந்து சேவை முடங்கியுள்ளது. இந்த வேலை நிறுத்தத்தின் காரணமாக, தமிழ்நாடு–கேரளா எல்லைப்பகுதிகளில் உள்ள அரசுப் போக்குவரத்து பணிமனைகளில் இருந்து இயக்கப்பட வேண்டிய பேருந்துகள் டெப்போவிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.
இதனால், கேரளாவின் பாலக்காடு, திருச்சூர், கோழிக்கோடு, திருவனந்தபுரம், எர்ணாகுளம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்ல வேண்டிய சேவைகள் இன்று இயங்கவில்லை.
உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து கேரளாவுக்கு பேருந்துகள் இயக்கப்படாததால், அதிகாலை முதலே கேரளா நோக்கி பயணம் செய்ய வந்த பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.
முன்பதிவு செய்திருந்த பயணிகள், தினசரி வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள் மற்றும் அவசர தேவைக்காக பயணம் செய்ய வந்த பொதுமக்கள் மாற்றுப் போக்குவரத்தைத் தேடி அலைந்து வருகின்றனர்.
இதற்கிடையில், கோவையில் இருந்து இயக்கப்படும் தமிழ்நாடு அரசு பேருந்துகள் கேரளா எல்லை வரையிலேயே இயக்கப்படுகின்றன. எல்லையைத் தாண்டி சேவை வழங்கப்படவில்லை.
இதனால் எல்லைப்பகுதிகளில் கூடுதல் நெரிசல் ஏற்பட்டுள்ளது. பயணிகள் பயணம் மேற்கொள்ளும் முன் சேவை நிலவரத்தை உறுதி செய்து கொள்ளுமாறு போக்குவரத்து துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

