கோவை: குடியிருப்புகள் நிறைந்த பகுதிக்குள் காட்டுமாடு உலா வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
குடியிருப்பு பகுதியில் காட்டு மாடு நடமாட்டம் அதிகரித்திருப்பது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தடாகம், கணுவாய், திருவள்ளுவர் நகர், சோமையனூர், பன்னிமடை, தாளியூர் போன்ற பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிக அளவு உள்ளது அடிக்கடி வனப்பகுதியில் இருந்து வெளியேறும் வனவிலங்குகள் விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகின்றன. மேலும் ஊருக்குள் புகுந்து சேதங்களை விளைவிப்பதால் பொதுமக்களும் விவசாயிகளும் அச்சத்தில் உள்ளனர்.
திருவள்ளுவர் நகர் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கருஞ்சிறுத்தை நடமாட்டம் காட்டு யானைகள் நடமாட்டம் இருந்து வந்த நிலையில் தற்போது காட்டு மாடுகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த இரண்டு மூன்று வாரங்களாகவே திருவள்ளுவர் நகர் பழனியப்பா லே-அவுட் பகுதியில் நள்ளிரவு நேரத்தில் காட்டுமாடுகள் நடமாட்டம் இருந்து வந்த நிலையில் தற்பொழுது மாலை 7-8 மணியளவிலேயே அப்பகுதியில் நடமாடத் துவங்கியுள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
சிலர் தைரியமாக காட்டுமாட்டை பார்த்து கொண்டு செல்போனில் புகைப்படம் எடுத்தாலும் குழந்தைகளை வெளியில் அனுப்புவதற்கு அச்சமாக இருப்பதாகவும் வனத்துறை காட்டுமாடு மக்கள் வசிக்கும் பகுதிக்குள் வராத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

