கோவை: கோவையில் ஆன்லைன் மூலம் 50 சதவீத ஆஃபர் என்ற பெயரில் பழைய அதிரசங்களை விற்பனை செய்த ஆனந்தாஸ் உணவகத்திற்குச் சென்ற வாடிக்கையாளர் ஒருவர், சரமாரியாகக் கேள்வியெழுப்பிய வீடியோ வைரலாகி வருகிறது.
கோவையில் பல்வேறு கிளைகளுடன் ஆனந்தாஸ் என்ற உணவகம் செயல்பட்டு வருகிறது. பிரபலமான இந்த உணவகத்தில் இனிப்பு மற்றும் கார வகைகளும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இதனிடையே ஸ்விக்கியில் 50 சதவீத சலுகை விலையில் அதிரசங்கள் விற்பனை செய்யப்படுவதாக ஆனந்தாஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஆசை ஆசையாய் கோவையைச் சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் அதில் அதிரசங்கள் மற்றும் ஸ்நாக்ஸ் வகைகளை ஆர்டர் செய்துள்ளார்.
தொடர்ந்து, அவரது வீட்டிற்கு அதிரசம் உள்ளிட்ட ஸ்நாக்ஸ் வகைகள் டெலிவரி செய்யப்பட்டன. அப்போது அந்த அதிரசப் பாக்கெட்டை பிரித்தபோது அது மிகவும் பழையதாகவும், கெட்டியாகவும் இருந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியும், கோபமும் அடைந்த அந்த வாடிக்கையாளர் ஆனந்தாஸ் உணவகத்திற்கு நேரில் சென்றார்.
மன்னிப்பு
மேலும் அங்கிருந்த ஊழியர்களிடம் இது குறித்து கேள்வி எழுப்பிய போது, அங்கிருந்தவர்கள் தங்களை மன்னித்துக் கொள்ளும்படி தெரிவித்துள்ளனர்.
அதற்கு அந்த வாடிக்கையாளர், ஆஃபர் என்ற பெயரில் பழைய பொருட்களை விற்பதுதான் வேலையா? எனக்கு வேறு எந்த ஸ்நாக்ஸ்களும் வேண்டாம். அதை சாப்பிட்டு நான் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. இந்த பொருட்களை எல்லாம் நீங்களே வைத்துக் கொண்டு எனக்கு பணத்தை திருப்பிக் கொடுங்கள் என்று முறையிட்டார்.
அதற்கு அங்கிருந்த ஊழியர்கள், ஸ்நாக்ஸ் வகைகளெல்லாம் புதிதுதான் என்று கூறினர். அதற்கு அவர் அந்த ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
வைரல் வீடியோ
இந்த சம்பவத்தை அந்த வாடிக்கையாளர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றவே தற்போது அது வைரலாகி வருகிறது.
பெரிய நிறுவனங்களில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்து, தரம் இல்லாத பொருட்களை விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகின்றனர்.





Comments are closed.