கோவை : கோவையில் ஊழல் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், அரசு நிர்வாகத்தில் ஊழலைத் தடுக்க பல்வேறு சீர்திருத்தங்களை அமல்படுத்தவும் வலியுறுத்தி, மாவட்ட ஊழல் எதிர்ப்பு இயக்கம் சார்பில் முதல்வருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்யவும், முறைகேடுகளில் ஈடுபடும் அதிகாரிகள் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி, கோவை மாவட்ட ஊழல் எதிர்ப்பு இயக்கம் சார்பில் தமிழக முதல்வருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
பொதுமக்களின் வரிப்பணத்தில் இருந்து சம்பளம் மற்றும் அரசு சலுகைகளைப் பெற்றுக்கொண்டு, முறைகேடான வழிகளில் சொத்துகளைச் சேர்க்கும் ஊழல் அதிகாரிகளை கண்டறிந்து, சட்ட விதிகளுக்கு உட்பட்டு உடனடியாக பணிநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒவ்வொரு அரசு துறையிலும் நடைபெறும் ஊழல் மற்றும் முறைகேடுகளுக்கு அந்தந்த துறைத் தலைவர்களே நிர்வாக ரீதியாக பொறுப்பேற்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தங்களது கட்டுப்பாட்டில் உள்ள அலுவலகங்கள் ஊழலற்ற முறையில் செயல்படுவதை உறுதி செய்து, அதற்கான காலமுறை அறிக்கையை தலைமைச் செயலாளரிடம் சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும்.
நீர்நிலைகள் மற்றும் இயற்கை வளங்களை ஆக்கிரமித்து மேற்கொள்ளப்பட்டுள்ள சட்டவிரோத கட்டுமானங்களை உடனடியாக அகற்ற வேண்டும். சென்னை உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் கண்காணிப்புக் குழுக்களை அமைத்து, ஆக்கிரமிப்புகளுக்கு காரணமான அதிகாரிகள் மீதும் உரிய குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுரங்கம் மற்றும் கனிம வளத்துறையில் நடைபெறும் முறைகேடுகளால் அரசுக்கு பெருமளவில் வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும், இதைத் தடுக்க அனைத்து எடைக் கூடங்களிலும் தானியங்கி டிஜிட்டல் கண்காணிப்பு முறையை ஏற்படுத்த வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கனிம வளங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களில் ஜிபிஎஸ் கண்காணிப்பு முறையை கட்டாயமாக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.
லஞ்ச ஒழிப்புத்துறை அரசியல் தலையீடு இல்லாமல் சுதந்திரமாக செயல்படும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களிடமிருந்து பெறப்படும் லஞ்சப் புகார்கள் மீது உடனடியாக விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில் அந்தத் துறைக்கு முழு அதிகாரம் வழங்க வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் வகையில், மேற்கண்ட நிர்வாகச் சீர்திருத்தங்களை போர்க்கால அடிப்படையில் விரைந்து செயல்படுத்த வேண்டும் என கோவை மாவட்ட ஊழல் எதிர்ப்பு இயக்கம் சார்பில் முதல்வரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவையில் ஊழல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க முதல்வருக்கு மனு.





