கோவை: கோவை விமான நிலையத்தில் ரூ. 66 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கோவை விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், சார்ஜா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், சென்னை, டெல்லி உள்ளிட்ட உள்நாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
பல்வேறு நாடுகளில் இருந்து விமானத்தில் சட்டவிரோதமான பொருட்களை இந்தியாவிற்குள் கடத்தி வருவதைத் தடுக்கும் வகையில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஆனாலும், சோதனைகளை மீறி சிலர் தங்கம், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள், வெளிநாட்டு சிகரெட்டுகளைக் கடத்தி வருகின்றனர். இவர்கள் அவ்வப்போது சிக்கிக் கொள்வதும் வழக்கமாக உள்ளது.
வெளிநாட்டு சிகரெட்டுகள்
இதேபோல், கடந்த 2 நாட்களில் ஷார்ஜாவில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு வந்த சில பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அதில், 11 பயணிகள் உடைமைகளில் மறைத்துக்கொண்டு வந்த 3 லட்சத்து 48 ஆயிரம் எண்ணிக்கையிலான வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் 895 எலக்ட்ரானிக் சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இவற்றின் மொத்த மதிப்பு ரூ.65.99 லட்சம் ஆகும். இந்த பொருட்களை சட்டவிரோதமாக கடத்தி வந்த பயணிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

