கோவை: கோவையில் காதல் திருமணம் செய்து கொண்ட மாநகராட்சி தூய்மை பணியாளர் விபரீத முடிவு எடுத்த சம்பவம் சக ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சாய்பாபா காலனி அருகே உள்ள வெங்கிட்டாபுரம், சுப்பிரமணியபுரம் 2வது வீதியை சேர்ந்தவர் ராமு (32). மாநகராட்சி தூய்மை பணியாளர். இவரது மனைவி சுகன்யா (32). இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.
இந்த நிலையில் ராமு காதல் திருமணம் செய்து கொண்டதால் அவரது குடும்பத்தினர், அவருடனான தொடர்பை துண்டித்ததாக தெரிகிறது. இதனால் ராமு மனவேதனையுடன் இருந்து வந்தார்.
மேலும், மது பழக்கத்திற்கு அடிமையானார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 16ம் தேதி வழக்கம் போல ராமு மதுகுடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனை சுகன்யா அவரை கண்டித்துள்ளார்.
அப்போது அவர்களுக்கு அடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது. சுகன்யா கோபித்துக் கொண்டு குழந்தையை அழைத்து பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். மறுநாள் சமாதானமாகி சுகன்யா வீடு திரும்பினார்.
அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. வெகு நேரமாக சுகன்யா கதவை தட்டி பார்த்தார். ஆனால் ராமு கதவை திறக்கவில்லை. சந்தேகமடைந்த சுகன்யா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றார்.
அங்கு ராமு தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். பின்னர் இதுகுறித்து சாய்பாபா காலனி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ராமு உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

