கோவை: கோவையில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் கல்லூரி மாணவர்கள் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் மாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் பூபாலன் (20). இவர் கோவை பீளமேடு ஹோப்ஸ் கல்லூரி பகுதியில் தங்கி இருந்து நவ இந்தியா ஹிந்துஸ்தான் கல்லூரியில் 3ம் ஆண்டு பி.எஸ்.சி கணினி அறிவியல் படித்து வருகிறார்.
நேற்று மதியம் பூபாலன் தனது நண்பர் நந்தகுமார் என்பவருடன் உணவு வாங்க கல்லூரி முன்பு நின்றிருந்தார். அப்போது அங்கு நின்றிருந்த அதே கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வரும் ஹரிஸ் கோவிந்த் மற்றும் கிரிஷ் ஆகியோர் பூபாலனை அழைத்து எதற்காக இங்கு நின்று கொண்டு இருக்கிறீர்கள், இங்கிருந்து போய்விடுங்கள் என கூறி தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.
அதற்கு பூபாலன், உணவு ஆர்டர் செய்து இருப்பதாகவும், வந்ததும் சென்று விடுவதாகவும் தெரிவித்துள்ளார். சிறிது நேரம் கழித்து பூபாலன் நவ இந்தியா சிக்னல் பகுதியில் உள்ள ஏடிஎம் அருகே நின்றிருந்தார்.
அப்போது அங்கு வந்த ஹரிஸ் கோவிந்த் மற்றும் அவரது நண்பர்கள் அபிஷேக், கிரிஷ், சசிகாந்த், மகேஷ்குமார், மோகன் ஆகியோர் மீண்டும் பூபாலனிடம் தகராறில் ஈடுபட்டு அவரை சரமாரியாக தாக்கினர்.
அதில் அவர் பலத்த காயம் அடைந்து மயங்கினார். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். மயக்கம் தெளிந்து எழுந்த பூபாலன் தனது பைக் மற்றும் செல்போன் காணாமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து பூபாலன் பீளமேடு போலீசில் புகார் அளித்தார்.
அதேபோல் ஹரிஸ் கோவிந்த் தன்னை பூபாலன் தாக்கியதாகவும் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் இரு தரப்பினரின் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்தனர்.
தொடர்ந்து பூபாலனை தாக்கிய 2ம் ஆண்டு படித்து வரும் கல்லூரி மாணவர்கள் காரைக்காலைச் சேர்ந்த ஹரிஸ் கோவிந்த் (18), தேனியைச் சேர்ந்த அபிஷேக் (20), ஓசூரைச் சேர்ந்த கிரிஷ் (18), மதுரையைச் சேர்ந்த சசிகாந்த் (19), சேலத்தைச் சேர்ந்த மகேஷ்குமார் (20) ஆகியோரை கைது செய்தனர்.
மேலும், ஹரிஸ் கோவிந்தை தாக்கிய பூபாலனையும் கைது செய்தனர்.
கோவை பீளமேடு பகுதியில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதலில் கல்லூரி மாணவர்கள் 6 பேரை போலீசார் கைது செய்தனர். இரு தரப்பினரின் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

