கோவை: கோவையில் ரயில் மோதி பெண் ஒருவர் பலியானார். அவரது மகன் படுகாயமடைந்தார்.
புரூக்பீல்டு மால் பின்புறம் உள்ள ரயில்வே தண்டவாள பகுதியில் நேற்று முன்தினம் பெண் மற்றும் வாலிபர் ஒருவர் ரயிலில் அடிபட்டு கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது.
அதன்பேரில், போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அந்த பெண் உயிரிழந்தது தெரியவந்தது. வாலிபர் படுகாயத்துடன் உயிருக்கு போராடினார்.
அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். விசாரணையில், அவர்கள் கர்நாடகாவை சேர்ந்த நவீனா (58), அவரது மகன் மனோகர் (28) என்பது தெரிய வந்தது.
இருவரும் சமீபத்தில் கோவை ஈஷா யோகா மையம் செல்ல வந்ததாக தெரிகிறது. ஆனால், அவர்கள் எதற்காக புரூக்பீல்டு ரயில்வே தண்டவாள பகுதிக்கு சென்றனர் என தெரியவில்லை.
அவர்கள் தண்டவாளத்தை கடக்கும் போது ரயில் மோதி அந்த பெண் பலியானாரா? அல்லது தற்கொலையா? என்பது குறித்து கோவை ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.



