கோவை: வெளிநாட்டு வேலை வாய்ப்பை நம்பி தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு செல்லும் இளைஞர்கள் சைபர் மோசடி கும்பல்களிடம் சிக்கி வருவதாக கோவை மாநகர காவல் துறை எச்சரித்துள்ளது.
குறிப்பாக கம்போடியா, மியான்மர் உள்ளிட்ட நாடுகளில் ஹோட்டல் வேலை, அலுவலக வேலை, அதிக சம்பளம், இலவச தங்கும் வசதி போன்ற கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் அளித்து இளைஞர்களை அழைத்துச் சென்று, பின்னர் சைபர் மோசடிகளில் ஈடுபட கட்டாயப்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கோவையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஹோட்டல் வேலைக்காக கம்போடியா சென்ற நிலையில், அங்கு சென்ற பிறகு அவரை சைபர் மோசடியில் ஈடுபட கும்பல் கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. அவர் அதற்கு மறுப்பு தெரிவித்ததால், அவரது பாஸ்போர்ட்டை பறித்து வைத்து கடுமையாக துன்புறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
உடல்நிலை மோசமடைந்த அந்த இளைஞர், கோவையில் இருந்த தனது தாயை தொடர்பு கொண்டு நடந்த கொடுமைகளை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இந்திய தூதரகத்தின் உதவியுடன் அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த அதிர்ச்சி சம்பவத்தை தொடர்ந்து, தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு பணி காரணமாகவோ அல்லது சுற்றுலா விசாவில் சென்றவர்களோ தொடர்பான பட்டியலை வைத்து விசாரணை மேற்கொள்ள சி.பி.சி.ஐ.டி. போலீசார் மாநகர சைபர் கிரைம் பிரிவினருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
அதன்படி, கோவையில் இருந்து தென்கிழக்கு நாடுகளுக்கு பணி காரணமாகவும், சுற்றுலா விசாவிலும் சென்ற 140 பேரிடம் இதுவரை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் 50 பேரை இதுவரை தொடர்பு கொள்ள முடியாததால், அவர்கள் சைபர் குற்ற கும்பல்களிடம் சிக்கி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கோவை மாநகர காவல் துறையினர் கூறுகையில், தொடர்பு கொள்ள முடியாதவர்களின் பட்டியல் சி.பி.சி.ஐ.டி. பிரிவினரிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும், அதிக சம்பளம், எளிய வேலை, இலவச தங்கும் இடம் போன்ற விளம்பரங்களை நம்பி இளைஞர்கள் சிக்கிக்கொள்ள வேண்டாம் என்றும் எச்சரித்தனர்.
மேலும், கம்போடியா, மியான்மர் உள்ளிட்ட நாடுகளில் வேலை வாய்ப்பு வழங்குவதாக கூறும் நிறுவனங்கள் குறித்து, அங்கு ஏற்கனவே பணிபுரிபவர்கள் அல்லது நம்பகமான மூலங்கள் மூலம் உறுதி செய்த பிறகே முடிவு எடுக்க வேண்டும் என்றும், அவசர முடிவுகள் உயிரிழப்பிற்கும் வழிவகுக்கலாம் என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

