கோவை: கள் மீதான தடையை நீக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் விவசாயிகள் கள்ளுக் குடித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பனை மற்றும் தென்னை விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, விவசாய சங்கத்தினர் கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், வெவ்வேறு விவசாய சங்கங்களைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு, தங்கள் கோரிக்கைகள் மற்றும் கண்டனங்கள் அடங்கிய பதாகைகளைக் கழுத்தில் அணிந்தவாறும், கையில் ஏந்தியும் கோஷங்கள் எழுப்பினர். மேலும், தென்னங்கீற்றை கைகளில் ஏந்தியும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
Advertisement


மேலும், கள் மீது தமிழக அரசு விடுத்துள்ள தடையை நீக்க வலியுறுத்தி கள்ளுக் குடித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், “கலப்படத்தைக் காரணம் காட்டி தமிழகத்தில் கள்ளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் கள்ளுக்கு தடை விதிக்கப்படவில்லை. அங்கெல்லாம் கலப்படத்தைக் கட்டுப்படுத்துகிறார்கள், தமிழ்நாட்டில் முடியவில்லையா?” என்றனர்.