கோவை: 23ஆம் தேதி மக்கள் செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் வடக்கு சட்டமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனின் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு நடைபெற்று வருகிறது.
சிவசக்தி காலனி பகுதியில் இருசக்கர வாகன பேரணியுடன் வாக்கு சேகரிப்பு தொடங்கியது. இந்த பேரணியை பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தொடங்கி வைத்து, இருசக்கர வாகனத்தை இயக்கினார். வானதி சீனிவாசன் அவருடன் அமர்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதில் நூற்றுக்கணக்கான பாஜக-அதிமுக கூட்டணி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், “இறுதி நாள் பிரச்சாரம் இருசக்கர வாகன பேரணியுடன் தொடங்குகிறது. கடந்த முறை போலவே கோவை மாவட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும்” என்று தெரிவித்தார்.
மேலும், “கோவையில் சிலர் ரவுடி கும்பல் மூலம் சட்டம்-ஒழுங்கை பாதிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். காவல் நிலையங்களிலேயே ரகளை செய்வது, எதிர்க்கட்சியினரை தாக்குவது போன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன” என்றும் குற்றம் சாட்டினார்.
திமுகவினர் சில தொகுதிகளில் ₹2,500 மற்றும் தெற்கு தொகுதியில் ₹5,000 வரை பணம் வழங்குகிறார்கள் என்றும், அந்த பணத்தின் மூலத்தை குறித்து கேள்வி எழுப்பினார்.
போதைப்பொருள் வருவாய் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் பணம் ஈட்டப்படுவதாக குற்றம் சாட்டிய அவர், “கோவை மக்கள் இதற்கு தக்க பதிலை அளிப்பார்கள்” என்றார்.
தொடர்ந்து பேசிய அண்ணாமலை, “கோவையில் சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்து மக்கள் கவலைப்படுகின்றனர். மத்திய அரசின் நிதியை கொண்டு வந்து செயல்படுத்தும் நிர்வாகம் தேவைப்படுகிறது” என்றார்.
“தேர்தல் கணிப்புகள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சாதகமாக உள்ளன. மக்கள் வாக்குப்பெட்டியில் தங்கள் கருத்தை தெரிவிப்பார்கள்” என்றும் தெரிவித்தார்.
மேலும், “23ஆம் தேதி மக்கள் செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்” என்று கடுமையாக விமர்சித்தார்.
தேர்தல் ஆணையம் மேலும் பலப்பட வேண்டும் என்றும், கூடுதல் அதிகாரிகளை கொண்டு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
“வானதி சீனிவாசன் வேட்புமனு தாக்கல் செய்த நாளிலேயே வெற்றி உறுதி ஆகிவிட்டது. எவ்வளவு பணம் வழங்கினாலும் இந்த தேர்தல் முடிவை மாற்ற முடியாது” என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.


