கோவை: கவுண்டம்பாளையம் தொகுதி தவெக வேட்பாளர் கனிமொழி மக்களோடு மக்களாக களத்தில் நின்று தேர்தல் பிரச்சாரத்தை இன்று நிறைவு செய்தார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது. தேர்தல் பிரச்சாரம் தொடங்கியது முதல் கோவையில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் தோசை சுடுவது, வாலிபால் விளையாடுவது, பூ கட்டுவது, இஸ்திரி போடுவது என்று பல்வேறு யுக்திகளை கையாண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.
மேலும் நட்சத்திர பேச்சாளர்களின் உதவியுடனும் பொதுமக்கள் மத்தியில் பல்வேறு வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

அதே நேரத்தில் கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கனிமொழி எந்தவித நுணுக்கங்களையும் பயன்படுத்தாமல், மக்களோடு மக்களாக களத்தில் நின்று அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்து, அவற்றை கட்டாயம் நிறைவேற்றி தருவேன் என்று கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
நரசிம்ம நாயக்கன்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில்
வீதி வீதியாக நடந்து சென்று பொதுமக்களிடையே வாக்கு சேகரித்த கனிமொழிக்கு அப்பகுதி பெண்கள் வரவேற்பு அளித்தனர். மேலும், கட்டாயம் அவருக்கு வாக்கு செலுத்துவதாகவும் தெரிவித்தனர்.
பிரச்சாரம் குறித்து கனிமொழி கூறுகையில்,
எங்கள் பிரச்சாரம் நாகரிகமான முறையில் சென்று கொண்டிருக்கிறது. செல்லும் இடங்களில் மக்கள் ஆதரவு தெரிவிப்பதால் வெற்றி கண்ணுக்குத் தெரிகிறது.
உள்ளுக்குள் பிரஷர் இருக்கிறது. இருந்தாலும் நாங்கள் எந்த பிரச்சனைக்கும், தேவையற்ற விஷயங்களுக்கும் செல்வதில்லை.

மிகப்பெரிய தொகுதியான கவுண்டம்பாளையம் தொகுதியில் இத்தனை ஆண்டுகளாக மேம்பாட்டுப் பணிகள் நடைபெறவில்லை. அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்படவில்லை. நான் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் தங்கள் கோரிக்கைகள் குறித்து பெரிய லிஸ்ட் கொடுக்கின்றனர்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு பகுதிக்கும் வாட்ஸ்-அப் குழு ஏற்படுத்தப்பட்டு, மக்கள் குறைகளை 24 மணி நேரம் முதல் 48 மணி நேரத்தில் நிவர்த்தி செய்வோம்.
விமர்சனங்கள் குறித்து யோசிக்காமல், நட்சத்திர பேச்சாளர்கள் உதவியும் இல்லாமல், மக்களோடு மக்களாக நிற்கிறேன். எனக்கு மக்கள் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
என்று கனிமொழி கூறினார்.


