கோவை: கோவையில் தாயைப் பிரிந்த குட்டி யானையை மற்ற யானைக் கூட்டங்கள் ஏற்க மறுத்து வரும் நிலையில், அந்த குட்டியை தாயுடன் சேர்த்து வைக்க வனத்துறையினர் 72 மணி நேரமாக போராடி வருகின்றனர்.
கோவை மாவட்டம் கந்தவயல் தற்காலிக சோதனைச் சாவடி அருகே கடந்த 25ம் தேதி அதிகாலை, ஆதரவற்ற நிலையில் யானைக் குட்டி ஒன்று அலைந்து திரிந்து கொண்டிருந்தது.
உடனடியாக களத்தில் இறங்கிய வனத்துறை மீட்புக் குழுவினர், ட்ரோன்கள் மூலம் தாய் யானைக் கூட்டத்தைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
சாலையில் குட்டி யானை
அன்று மாலை 3 மணி அளவில் ஒரு யானைக் கூட்டம் தென்பட்டது. தொடர்ந்து அந்த குட்டி யானையை லாவகமாக வழிநடத்திச் சென்று கூட்டத்தின் அருகே விட்டனர். இரவு முழுவதும் தெர்மல் கண்காணிப்பு வாகனங்கள் மூலம் அந்த குட்டி யானை கண்காணிக்கப்பட்டது.
குட்டி பாதுகாப்பாக இருக்கும் எனக் கருதப்பட்ட நிலையில், அடுத்த நாள் ஏப்ரல் 26-ஆம் தேதி நிலைமை மாறியது. யானைக் கூட்டத்தைத் தஞ்சமடைய முயன்ற குட்டியை, அங்கு இருந்த ஒரு ஆண் யானை ஆக்ரோஷமாக விரட்டி அடித்தது.
மூன்றாவது நாளாக
கூட்டத்தால் விரட்டப்பட்ட குட்டி, திக்கற்ற நிலையில் நீர்நிலைக்கு அருகிலேயே நின்றது. இதனையடுத்து தளராத வனத்துறையினர், வேறொரு யானைக் கூட்டத்தில் அந்த குட்டி யானையை சேர்க்க முயற்சி செய்தனர்.
மூன்றாவது நாளான இன்று, வனவிலங்குகளுக்கு ஓடந்துறை பகுதியில் வனத்துறையினர் அமைத்துள்ள தொட்டி அருகே அந்த குட்டியை நிறுத்தி வைத்து யானைக் கூட்டத்தின் வருகைக்காக அதிகாரிகள் காத்திருந்தனர்.
இந்நிலையில் மாலை 4 மணி அளவில் மற்றுமொரு கூட்டத்துடன் குட்டியைச் சேர்க்கும் முயற்சி மீண்டும் ஒருமுறை தோல்வியில் முடிந்தது.
கூட்டத்துடன் சிறிது நேரம் இருந்த போதிலும், மீண்டும் அது விரட்டப்பட்டதால் களப்பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
விரட்டும் யானைகள்
தற்போது அந்த யானைக் குட்டி வனத்துறை கால்நடை மருத்துவர்களின் நேரடி பார்வையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
சரியான யானைக் கூட்டத்துடன் குட்டியைச் சேர்க்கும் வரை முயற்சி தொடரும் என்று மாவட்ட வன அலுவலர் தெரிவித்துள்ளார்.


