கோவை: சூலூர் அரசுப் பள்ளியில் எம்.எல்.ஏ கேட்டவுடன் ஓடிவந்து திருக்குறள் ஒப்புவித்த மாணவனின் வீடியோ வைரலாகி வருகிறது.
கோடை விடுமுறை முடிந்து நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டதை முன்னிட்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு கோவை மாவட்டம் சூலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பட்டணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், சூலூர் சட்டமன்ற உறுப்பினர் என்.எம்.சுகுமார் அவர்கள் நேரில் கலந்து கொண்டு, பள்ளிக்கு வருகை தந்த மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள், புதிய பாடப்புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்களை வழங்கி வரவேற்றார்.

பின்னர் சட்டமன்ற உறுப்பினர் என்.எம்.சுகுமார் மாணவர்களுடன் கலந்துரையாடினார்அப்போது அவர் கேட்ட கேள்விக்கு, பள்ளி மாணவன் ஒருவன் சற்றும் தயங்காமல் உடனடியாக ஓடிவந்து, ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும் என்ற திருக்குறளை கணீரென்ற குரலில் துல்லியமாகக் ஒப்புவித்து அங்கிருந்தோரை ஆச்சரியத்தில் ஆழ்த்தினான்.
மாணவனின் இந்த அறிவார்ந்த செயலைக் கண்டு நெகிழ்ந்த எம்.எல்.ஏ மற்றும் அதிகாரிகள், அம்மாணவனைத் தட்டிப் கொடுத்துப் பாராட்டினர்.
மாணவர்களை வரவேற்றதைத் தொடர்ந்து, பள்ளியில் செயல்பட்டு வரும் சத்துணவு கூடத்திற்குச் சென்ற எம்.எல்.ஏ என்.எம்.சுகுமார், அங்கு உணவின் தரம் மற்றும் தூய்மை குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், பள்ளி வகுப்பறைகளின் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்தும் அவர் கேட்டறிந்தார்.


