கோவை: கோவை பேரூர் டி.எஸ்.பி கால்நடையாக ரோந்து சென்று பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில், கோவை நகரில் இனி காலை மற்றும் மாலை வேளைகளில் காவலர்கள் தங்களின் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நடந்து சென்று ரோந்துப் பணியில் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் தங்களின் குறைகளை போலீசாரிடம் எளிதில் தெரிவிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த உத்தரவின் அடிப்படையில், பேரூர் சரக காவல் துறை டி.எஸ்.பி நேற்று மாலை தொண்டாமுத்தூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட குளத்துப்பாளையம் பகுதியில் இருந்து குபேரபுரி வரை நடந்து சென்று தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டார்.
ரோந்துப் பணியின் போது, பள்ளிகள் முடிந்து வீட்டிற்குச் செல்ல சாலையில் நின்று கொண்டு இருந்த மாணவர்களிடம் டி.எஸ்.பி கலந்துரையாடி, அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு அறிவுரைகளை வழங்கினார்.
பாதுகாப்பு மற்றும் சி.சி.டி.வி ஆய்வு:
இதனைத் தொடர்ந்து, சந்தைப்பேட்டை பேருந்து நிறுத்தப் பகுதியில் பேருந்துக்காகக் காத்து இருந்த பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து
சக போலீசாரிடம் அவர் கேட்டறிந்தார். மேலும், அப்பகுதியில் கூடுதல் பாதுகாப்பிற்காக சிசிடிவி (CCTV) கேமராக்கள் பொருத்துவது குறித்தும் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து குபேரபுரி பகுதியில் வசித்து வரும் வடமாநில தொழிலாளர்களின் குடியிருப்புப் பகுதிக்குச் சென்ற டி.எஸ்.பி, அவர்களின் தங்குமிடம் யாருடையது, அவர்கள் யாரிடம் வேலை செய்கிறார்கள் என்பது குறித்தும், அவர்களின் அடையாள ஆவணங்கள் மற்றும் தங்கி இருப்பதற்கான உரிய உரிமங்கள் உள்ளதா ? என்றும் கேட்டறிந்து சோதனை நடத்தினார்.காவல் துறையினரின் இந்த அதிரடி கால்நடை ரோந்துப் பணி அப்பகுதி மக்கள் இடையே பெரும் வரவேற்பைப் பெற்று உள்ளது.


