கோவை: கோவையில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் சம்பத்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் அந்தந்த பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு பள்ளிகள், பேருந்து நிலையங்கள் என பல்வேறு பகுதிகளில் திடீர் கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரும் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சருமான சம்பத்குமார் கோவையில் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அரசு மருத்துவமனை பேருந்து நிலையங்கள் என பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடமும் அங்கு பணிபுரியும் பணியாளர்கள், அலுவலர்கள், மருத்துவர்கள், தேவைகள் குறித்து கேட்டறிந்து வருகிறார்.
அதன்படி கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட மணியக்காரன்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள ஆய்வகங்கள், மருந்து வழங்கும் இடம், படுக்கை வசதிகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்த அவர் அந்த சிகிச்சை பெறுபவர்களிடமும் சிகிச்சை எவ்வாறு உள்ளது என கேட்டறிந்தார். மேலும் அங்கு உள்ள மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களிடமும் சுகாதார நிலையத்திற்கு ஏதேனும் தேவைகள் உள்ளதா என்றும் கேட்டறிந்தார்.


