கோவை: கோவை சூலூர் சம்பவத்தில் அடையாள அணிவகுப்பில் கொலையாளியை சாட்சிகள் உறுதி செய்தனர்.
கோவை: சூலூர் சிறுமி கொலை வழக்கில் அடையாள அணிவகுப்பில் கொலையாளியை சாட்சிகள் உறுதி செய்தனர்.
கோவை மாவட்டம் சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பள்ளபாளையம், பாரதிபுரம், அருணகிரிநாதர் வீதியில் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமி கடந்த 21ம் தேதி மாலை சுமார் 5 மணி அளவில் காணாமல் போயுள்ளார்.
இதுகுறித்து காவல் அவசர உதவி எண் 100 மூலம் தகவல் கிடைக்கப்பெற்றது. தகவல் கிடைத்தவுடன் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு, புகார் பெற்று அதே இரவு சுமார் 10 மணியளவில் குழந்தை காணாமல் போனது தொடர்பாக வழக்கு பதிவு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து கருமத்தம்பட்டி உட்கோட்ட டிஎஸ்பி., மேற்பார்வையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, காணாமல் போன சிறுமியை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. விசாரணையின் போது சிசிடிவி காட்சிகள் மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்கள் ஆய்வு செய்யப்பட்டது.
அதில், சிறுமியின் குடும்பத்திற்கு பழக்கமான அண்டை வீட்டில் வசிப்பவரான நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த கார்த்தி (33), என்பவர் சிறுமியை அழைத்துச் சென்றது உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள மரியா ரோஸ் கார்டன் அடுக்குமாடி குடியிருப்பின் முதல் மாடியில் பதுங்கியிருந்த குற்றவாளி கார்த்தியை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.
விசாரணையில், குற்றவாளி கார்த்தி, சிறுமியை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததும், பின்னர் கண்ணம்பாளையம் குளம் அருகிலுள்ள தென்னைத் தோட்டத்தில் கொலை செய்ததையும் ஒப்புக்கொண்டார்.
மேலும், நடைபெற்ற தொடர் விசாரணையில், பாரதிபுரம், பள்ளபாளையத்தை சேர்ந்த மோகன் (30) என்பவர், முக்கிய குற்றவாளியான கார்த்திக்கு உறுதுணையாக இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கு போக்சோ கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த நிலையில் சிறுமியை கார்த்தி கடத்தி சென்றதை அதே பகுதியை சேர்ந்த 2 பேர் பார்த்துள்ளனர். அவர்கள் இந்த வழக்கில் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து அடையாள அணிவகுப்பு நடத்த போலீசார் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தனர். அதன்படி கோவை மத்திய சிறையில் நேற்று முன்தினம் நீதிபதி முன்பு அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது.
அப்போது சாட்சிகளாக சேர்க்கப்பட்ட 2 பேரும் சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த கார்த்தியை அடையாளம் கண்டு உறுதி செய்தனர்.
இதனை போலீசார் வீடியோவாக பதிவு செய்து நீதிபதியிடம் ஒப்படைத்தனர். அவை போக்சோ கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட உள்ளது


