கோவை: கோவை சுந்தராபுரம் கிணத்துக்கடவு பகுதியில் நேரடி ஆய்வு மேற்கொண்டார் கோவை மாவட்ட ஆட்சியர்.
கோயம்புத்தூர் மாநகராட்சி, தெற்கு மண்டலம் சுந்தராபுரம் பகுதியில் இயங்கி வரும் சமூக நீதி மாணவர் விடுதியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் லட்சுமி, கிணத்துக்கடவு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மோகன் பாபு,ராஜேஷ் குமார், வட்டாட்சியர் வாசுதேவன், உதவி பொறியாளர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
இந்த ஆய்வில் மாவட்ட ஆட்சித்தலைவர், விடுதியின் அடிப்படை வசதிகள், மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உணவின் தரம் மற்றும் அட்டவணைப்படி உணவு வழங்கப்படுகிறதா என்பது குறித்தும் மாணவர்களின் வருகைப் பதிவேடு, உணவுப் பொருட்களின் இருப்பு விவரங்கள் மாணவர்களின் பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு நடவடிக்கைகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கேரம் போர்டு, செஸ், வாலிபால் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களையும் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், அங்குள்ள மாணவர்களுடன் கலந்துரையாடி அவர்களின் கோரிக்கைகள் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்து, மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவதற்காக நன்கு படித்து உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
முன்னதாக, மாவட்ட ஆட்சித்தலைவர், கிணத்துக்கடவு வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில், ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ.1.62 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அலுவலர் குடியிருப்பு கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு துறைச்சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.



