கோவை: தன்னை நம்பி வந்தவர்களுக்கு கட்சியில் பதவி கொடுக்காமல், எனக்கு மட்டும் பதவி கொடுப்பதா? என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கொதிப்புடன் பேசிய வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, விஜய் தலைமையிலான தவெக அரசு ஆட்சி அமைத்துள்ள நிலையில், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து வருவதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
இதனிடையே, தவெக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்ததாக கூறப்பட்ட நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வகித்து வந்த தெற்கு மாவட்டச் செயலாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி பறித்தார்.
மேலும், அந்தப் பதவி முன்னாள் மேயர் செ.ம.வேலுசாமிக்கு வழங்கப்பட்டது.
இதனிடையே, இ.பி.எஸ். மற்றும் எஸ்.பி.வேலுமணி இடையே சமரசம் ஏற்பட்ட நிலையில், அவர் அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார்.
ஆனால், அவர் வகித்து வந்த புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் பதவி மீண்டும் அவருக்கு வழங்கப்படவில்லை.
இதனிடையே, எஸ்.பி.வேலுமணி தொண்டாமுத்தூர் பகுதியில் நேற்று முன்தினம் தனது ஆதரவாளர்களைச் சந்தித்தார். அப்போது, தனக்கு வாக்களித்தவர்களுக்கும், தான் வெற்றி பெற உதவிய தொண்டர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
இந்தச் சூழலில், ஆலோசனைக் கூட்டத்தில் எஸ்.பி.வேலுமணி ஆவேசமாக பேசிய வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன.
அந்த வீடியோவில், “எனக்கு மட்டும் பதவியா? என்னை நம்பி வந்தவர்களுக்கு பதவி வழங்க வேண்டும். முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டவர்கள் ஜாம்பவான்கள். அந்தந்த மாவட்டங்களில் செலவு செய்து கட்சியை வளர்த்து வருகிறார்கள்.
அவர்களுக்கு மட்டும் பதவி கொடுக்காமல், எனக்கு மட்டும் பதவி கொடுப்பது நியாயமா?” என்று ஆக்ரோஷமாக பேசினார்.
எஸ்.பி.வேலுமணி பேசிய அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


