கோவை: பொள்ளாச்சியில் கெட்டுப்போன பாமாயில் விநியோகம் செய்யப்பட்டு வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் நியாய விலைக்கடையில் கெட்டுப்போன பாமாயில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
ரேஷன் அட்டைகள் மூலம் மானிய விலையில் பாமாயில் விற்பனை செய்யப்பட்டு வருகிர்து. இதனிடையே பொள்ளாச்சியை அடுத்த மகாலிங்கபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் 31GL006PN என்ற இலக்கமிட்ட நியாய விலைக்கடையில் பாமாயில் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
அப்போது அங்கு வந்த பொதுமக்கள் அனைவரும் பாமாயிலின் காலவதி தேதியைப் பார்க்காமல் அதனை வாங்கிச் சென்றனர். வீட்டிற்குச் சென்ற அந்த எண்ணெய் பாக்கெட்டை பிரித்தபோது, எண்ணெயில் துர்நாற்றம் வீசுவதுடன், அதன் நிறமும் மாறியிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடனிதனர்.
இதனைத் தொடர்ந்து எண்ணெய் பாக்கெட்டை பார்த்தபோது அது காலவதியானது தெரியவந்தது. தொடர்ந்து பொதுமக்கள் நியாய விலைக்கடைக்குச் சென்று பார்த்தபோது அங்கிருந்த எண்ணெய் பாக்கெட்டுகள் அனைத்தும் காலவதியாகியிருந்தது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்ற கிராம மக்கள் இதுகுறித்து கடை ஊழியர்களிடம் பொதுமக்கள் கேள்வி எழுப்பியபோது, “தற்போது ஸ்டாக்கில் உள்ள எண்ணெய் இதுதான். புதிய பாமாயில் வந்ததும் தற்போது வழங்கப்பட்ட பாக்கெட்டுகளை கொண்டு வந்து மாற்றிக்கொள்ளலாம்” என்று கூறியதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், இதுகுறித்து முன்கூட்டியே எந்த அறிவிப்பும் வழங்கப்படாமல், கெட்டுப்போன எண்ணெய் விற்பனை செய்யப்பட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
விழிப்புணர்வு இல்லாத பலர், வழங்கப்படும் பாமாயிலின் தரத்தை கவனிக்காமல் வாங்கிச் செல்வதால், அது உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Also Read: கோவையில் சாலையில் கொட்டிய டீசல்- வழுக்கி விழுந்த வாகன ஓட்டிகள்…
எனவே, நியாய விலைக்கடைகளில் வழங்கப்படும் உணவுப் பொருட்களின் தரத்தை அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து, கெட்டுப்போன பாமாயில் விற்பனையை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிய பாமாயிலை உடனடியாக மாற்றி வழங்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் உணவுப் பொருட்களின் தரத்தை தொடர்ந்து கண்காணிக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.


