கோவை: கோவை மாநகராட்சியில் மேலும் இரண்டு நியாய விலை கடைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
கோயம்புத்தூர் மாநகராட்சி, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, ரூ.57 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய 2 நியாயவிலைக் கடைகளையும், புதிய அங்கன்வாடி மையத்தினையும் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன், முன்னிலையில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி திறந்து வைத்து பார்வையிட்டார்.
கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் மத்தியம் ஆகிய 5 மண்டலங்களுக்குட்பட்ட வார்டுகளில் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், கோயம்புத்தூர் மாநகராட்சி, தெற்கு மண்டலம், வார்டு எண்.91க்குட்பட்ட சுகுணாபுரம் மேற்கு, கல்கி கார்டன் பகுதியில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாய விலைக் கடையை மேயர், முன்னிலையில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர், திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நியாயவிலைப் பொருட்களை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, மேற்கு மண்டலம், வார்டு எண்.73க்குட்பட்ட பொன்னையராஜபுரம் பகுதியில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.22 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாயவிலைக் கடை மற்றும் வார்டு எண்.72க்குட்பட்ட அருணாச்சலம் வீதியில், ரூ.15 இலட்சம் மதிப்பீட்டில், புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டடம் என மொத்தம் ரூ.57 இலட்சம் மதிப்பீட்டிலான நியாயவிலைக்கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் ஆகியவற்றை பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திறந்து வைத்து பார்வையிட்டார்.


